ADDED : ஜன 24, 2025 10:17 PM

புதுடில்லி:உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவு செய்யவில்லை எனக் கூறி, இந்திய உணவு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, 4 டன் மிளகாய் துாளை பதஞ்சலி நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
சிவப்பு மிளகாய் துாள் உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் உற்பத்தியில், பூச்சிக்கொல்லி மருந்தின் அதிகபட்ச தடய அளவை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவுத் தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ளது.
அவ்வப்போது உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் அது சோதனை நடத்தி, சான்று வழங்குவதுடன்; விதிகளை நிறைவு செய்யாத நிறுவனங்களின் பொருட்களுக்கு தடை மற்றும் அபராதம் விதிப்பது வழக்கம்.
பதஞ்சலி நிறுவனத்தின் மிளகாய் துாளின் குறிப்பிட்ட சிப்பங்களை ஆய்வு செய்ததில், பூச்சிக்கொல்லி தடய விதிமுறைகளை நிறைவு செய்யத் தவறியதால், அந்த சிப்பங்களை திரும்பப் பெற எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் அஸ்தானா கூறுகையில், கிட்டத்தட்ட 4 டன் அளவிலான மிளகாய் துாள் திரும்பப் பெறப்படுவதாகவும், குறிப்பிட்ட வரிசையிலான மிளகாய் துாளை வாங்கிய வாடிக்கையாளர்கள், அதை திருப்பிக் கொடுத்து, தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

