ADDED : நவ 21, 2024 02:32 AM

ஓசூர்:'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம், ஓசூரில் உள்ள தொழிற்சாலையை, 3,699 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்வதற்கு, தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கான பாகங்கள் தயாராகின்றன. இதற்காக, 3,051 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், 20,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது.தற்போது, ஓசூர் ஆலையை, 3,699 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 1.49 லட்சம் சதுர மீட்டரில் செயல்பட்டு வரும் ஆலை, 5 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததையடுத்து, விரைவில் விரிவாக்க ஆலைக்கான கட்டுமானப் பணிகளை டாடா நிறுவனம் மேற்கொள்ள
திட்டமிட்டுள்ளது.