ADDED : ஏப் 04, 2025 12:20 AM

புதுடில்லி:பி.பி.எப்., எனும் பொது வைப்பு நிதி கணக்குகளில், புதிய நாமினிகளை சேர்க்கவோ, ஏற்கனவே உள்ள நாமினிகள் குறித்த தகவல்களை புதுப்பிக்கவோ கட்டணம் வசூலிக்கப்படாது என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் இந்த சேவைக்கு தற்போது கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
பொது வைப்பு நிதி கணக்குகளில் புதிய நாமினிகளை சேர்க்கவோ, ஏற்கனவே உள்ள நாமினிகளை நீக்கவோ அல்லது அவர்கள் குறித்த தகவல்களை புதுப்பிக்கவோ, கட்டணம் வசூலிக்கப்படுவதை அகற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி சட்ட திருத்த மசோதா 2025ன் கீழ், வாடிக்கையாளர்கள், தங்களது டிபாசிட் மற்றும் லாக்கர் கணக்குகளுக்கு, நான்கு பேர் வரை நாமினிகளாக நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

