UPDATED : ஜூலை 25, 2025 06:36 AM
ADDED : ஜூலை 24, 2025 11:58 PM

புதுடில்லி: வலுவான வெளிநாட்டுத் தேவை காரணமாக, ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்ததால், நாட்டின் தனியார் துறை உற்பத்தியும், விற்பனையும் வளர்ச்சிப் பாதையில் தொடர்வதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் வெளியிடப்படும் பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டில், இம்மாதத்துக்கான தரவுகளில், கூட்டு பி.எம்.ஐ., குறியீடு 60.70 புள்ளிகளாக சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் 61 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும்; குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும்.
தயாரிப்பு துறை வளர்ச்சி 17 ஆண்டு உச்சத்தை எட்டியதே ஒட்டுமொத்த வளர்ச்சியை தக்க வைக்க உதவியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 58.40 புள்ளிகளாக இருந்த தயாரிப்பு துறை பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 59.20 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சேவைகள் துறை பி.எம்.ஐ., குறியீடு 60.40 புள்ளிகளில் இருந்து 59.80 புள்ளிகளாக குறைந்துள்ளது.

