மகளிர் தொழில்முனைவோருக்கு மதுரையில் பொது வசதி மையம்
மகளிர் தொழில்முனைவோருக்கு மதுரையில் பொது வசதி மையம்
ADDED : ஜூன் 12, 2025 12:58 AM

சென்னை:மதுரையில், சிறுதானியங்களைப் பயன்படுத்தி, உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் மகளிர் தொழில்முனைவோர் பயன் பெற, 8 கோடி ரூபாயில் பொது வசதி மையத்தை, சிட்கோ நிறுவனம் அமைக்க உள்ளது.
'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், ஒரு இடத்தில் ஒரே மாதிரியான தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள், தளவாடங்களை உள்ளடக்கிய, பொது வசதி மையத்தை அமைத்து தருகிறது.
இதன் வாயிலாக, ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இயந்திரங்களுக்காக அதிக முதலீடு செய்யாமல், குறைந்த கட்டணத்தில் சேவைகளைப் பெற முடியும்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், சிறுதானியங்களைப் பயன்படுத்தி, உணவு பொருட்கள் தயாரிப்பு தொழிலில், 150க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் பயன்பெறும் வகையில், திருமங்கலத்தில் சிறுதானிய குழு பொது வசதி மையம், 8 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக, தொழில்முனைவோருடன், சிட்கோ அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழில் குழுமங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், சிறுதானிய பொது வசதி மையம் அமைப்பது தொடர்பாக, மகளிர் தொழில்முனைவோர் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதில் இடம்பெற்றிருந்த இயந்திரங்களில் சில மாறுதல்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ப, திருத்திய திட்ட அறிக்கை மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டதும், நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்படும்.
அதை தொடர்ந்து, இயந்திரங்கள் கொள்முதல் உள்ளிட்ட பணிகள் துவங்கப்படும். இதனால், மகளிர் தொழில்முனைவோர் நவீன தொழில்நுட்ப வசதிகளை, மிக குறைந்த செலவில் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.