ரயில்வே கையாண்ட சரக்குகள் ஏழரை மாதத்தில் 100 கோடி டன்
ரயில்வே கையாண்ட சரக்குகள் ஏழரை மாதத்தில் 100 கோடி டன்
ADDED : நவ 22, 2025 11:59 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் கடந்த 19ம் தேதி வரை, 102 கோடி டன் சரக்குகளை ரயில்வே கையாண்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினமும் சராசரியாக, 44 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு கையாள்வதில் ரயில்வே துறையின் திறன் மேம்பாடு மற்றும் தொடர்ச்சியான தேவையே இதற்கு முக்கிய காரணங்கள் என்றும்; நாட்டின் தொழில்துறை விரிவாக்கத்துக்கும், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் ரயில்வே தொடர்ந்து பங்காற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்தில் நிலக்கரி தான் தொடர்ந்து அதிக பங்கு வகித்து வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக இரும்பு தாது மற்றும் சிமென்ட் அதிகம் அனுப்பப்படுகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் சிமென்டின் முக்கிய பங்கை கருத்தில்கொண்டு, இதன் சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

