மரபணு மாற்றப்பட்ட உணவுகளுக்கு தடை விதித்தது ராஜஸ்தான் ஐகோர்ட்
மரபணு மாற்றப்பட்ட உணவுகளுக்கு தடை விதித்தது ராஜஸ்தான் ஐகோர்ட்
ADDED : அக் 19, 2025 03:04 AM

ஜோத்பூர்: மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை, உற்பத்தி மற்றும் வினியோகம் அல்லது இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அதன் உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், பிரிவு 22ன் கீழ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள் தொடர்பான விதிமுறைகளை 6 மாதத்துக்குள் உருவாக்கி, வெளியிட வேண்டும்.
அதுவரை எந்தவொரு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை மத்திய அரசும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அமைப்பும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இந்த உத்தரவை சுங்கத்துறை, துறைமுக அதிகாரிகள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில், கிரித்திஷ் ஆஸ்வால் உட்பட மூன்று பேர், மரபணு மாற்ற உணவு பொருட்களுக்கு தடை கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளில் இருந்து தயாரித்த சமையல் எண்ணெய் விற்பனை, அரசியல் சாசன 21வது பிரிவின்கீழ் குடிமகனின் உரிமை மீறுவதாகும் என தெரிவித்திருந்தனர். அந்த வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.