பாகிஸ்தானில் இருந்து வரும் பணம் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., எச்சரிக்கை
பாகிஸ்தானில் இருந்து வரும் பணம் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., எச்சரிக்கை
ADDED : ஆக 27, 2025 12:57 AM

மும்பை:மறைமுகமாக பாகிஸ்தானில் இருந்து வரும் பணம் குறித்து விழிப்புடன் இருக்கவும்; ஆய்வுகளை அதிகரிக்கவும், வங்கிகளை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
வங்கிகளுக்கு அண்மை யில் அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானில் இருந்து நேரடியாக இந்திய வங்கிகளில் பணவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணப்பரிவர்த்தனையும் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கிடைத்த பிறகே, வங்கியால் பெறப்பட வேண்டும்.
பாகிஸ்தானில் இருந்து வரும் நிதி, அதிக ஆபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆயுதக் கொள்முதல், பயங்கரவாதத்துக்கு உதவி உள்ளிட்ட தேச விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், எச்சரிக்கை அவசியம்.
நேரடி பணப்பரிவர்த்தனை தடுக்கப்பட்டாலும், மறைமுகமாக வேறு வழிகளில் பணம் வருகிறதா என்பதில் வங்கிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். சட்டவிரோத பண நடமாட்டம் ஏதும் நடைபெறாமல், பரிவர்த்தனைகளை கடும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஆர்.பி.ஐ., கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர், பிற நாடுகள் வழியாக இந்தியாவுக்கு பணம் அனுப்பி வருவதை, புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித் தன. இதைத் தொடர்ந்து, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.