தேசிய புள்ளியியல் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்க பரிந்துரை
தேசிய புள்ளியியல் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்க பரிந்துரை
ADDED : டிச 04, 2025 03:36 AM

புதுடில்லி: தேசிய புள்ளியியல் ஆணையத்துக்கு, சட்டபூர்வ அந்தஸ்து வழங்க, நிதிக்கான பார்லி., நிலைக்குழு பரிந்துரை செய்திருப்பதற்கு, சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் சம்மேளனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ., அமைப்பின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் பஜாஜ் தெரிவித்துள்ளதாவது:
தொழில்போட்டித் திறனை அதிகரிக்கவும்; கொள்கை வடிவமைப்புக்கும் தேவையான அதிக நம்பகமான புள்ளியியல் அமைப்புகள் தேவையென்பதால், புள்ளியியல் ஆணையத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து அவசியம். தொழில்துறையினர், நம்பகமான மற்றும் தேவையான நேரத்தில் கிடைக்க வேண்டிய தகவல்கள் தேவை என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். எனவே, இந்திய தொழில்துறையின் போட்டித்திறனை வலுப்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியம். அமைப்பு ரீதியாக விரிவான சீர்திருத்தங்களும் தேவை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பார்லி.,யில் நிதிக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், தேசிய புள்ளியியல் ஆணையத்தை, தன்னாட்சி அமைப்பாகவும்; பார்லிமென்டுக்கு பதிலளிக்கும் வகையிலும் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கு நிரந்தரமான சட்டபூர்வ அமைப்பு தேவை என்று ரங்கராஜன் ஆணையம், கடந்த 2001ல் தந்த பரிந்துரையை இந்தக் குழுவும் வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற ஓர் அமைப்பு இல்லாத காரணத்தால், உள்நாட்டு மொத்த உற்பத்திக் குறியீடுகள் வரையறை, தாறுமாறாக அமைகிறது என்றும் தெரிவித்திருந்தது.

