'செங்கடல் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்'
'செங்கடல் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்'
ADDED : ஆக 17, 2026 06:20 AM

திருப்பூர்: ஆடை ஏற்றுமதியில் தாமதம் ஏற்படுத்தி வரும் செங்கடல் பிரச்னைக்கு, விரைவில் சுமுக தீர்வு காண வேண்டும் என, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
செங்கடல்-சூயஸ் கால்வாய் வழித்தடம், இந்தியாவை ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையாக உள்ளது. செங்கடலில் தொடரும் தாக்குதல், அச்சுறுத்தல் காரணமாக, சரக்கு கப்பல்கள் இந்த வழித்தடத்தை தவிர்த்து, தென்ஆப்பிரிக்காவை சுற்றி, 'கேப் ஆப் குட் ஹோப்' வழியாக செல்கின்றன.
இதனால், கப்பல் பயணம் 15 நாட்கள் வரை அதிகரித்துள்ளது. ஆடைகளை குறித்த நேரத்தில் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதுடன், ஏற்றுமதியாளர்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலர் குமார் துரைசாமி கூறியதாவது:
திருப்பூரில் இருந்து அனுப்பப்படும் ஆடைகள், வழக்கமாக 20 முதல் 27 நாட்களில் ஐரோப்பிய துறைமுகங்களை சென்றடையும். தற்போது செங்கடல் பிரச்னையால், 42 நாட்கள் வரை ஆகிறது.
கப்பல்கள் ஆப்ரிக்காவை சுற்றி செல்வதால், பயண நாட்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் என இரு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். செங்கடல் பிரச்னை 1,000 நாட்களை கடந்துள்ள நிலையில், இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கி வரும் மத்திய அரசு, செங்கடல் பிரச்னைக்கும் சுமுக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
