ADDED : ஆக 23, 2025 10:17 PM

புதுடில்லி:யூரியா ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளதால், இந்தியா அதிக பயன் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாண் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் யூரியாவை, ஏற்றுமதி செய்வதற்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சீனாவில் இருந்து யூரியாவை அதிகளவில் இறக்குமதி செய்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், இதனால் பாதிப்பை சந்தித்தன.
இந்நிலையில், சீனாவுடன் மத்திய அரசு தரப்பில் வர்த்தக நடைமுறை குறித்த பேச்சு நடைபெற்றது. குறிப்பாக, யூரியா உள்ளிட் உரங்கள், அரிய வகை காந்தங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஆகியவற்றின் இறக்குமதி மீதான கட்டுப்பாட்டை தளர்த்த, இந்தியா விடுத்த கோரிக்கையை சீனா ஏற்றுக்கொண்டது.
கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின், 20 முதல் 30 லட்சம் டன் வரை மட்டுமே வெளிநாடுகளுக்கு சீனாவில் இருந்து யூரியா ஏற்றுமதி நடைபெற்றது. தற்போது அதை, 70 லட்சம் டன் வரை விடுவிக்க, சீன வர்த்தக அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, யூரியா இறக்குமதி கட்டுப்பாட்டை சீனா தளர்த்தியுள்ளதன் பலனை இந்தியா பெறும் என்றும்; யூரியா இறக்குமதி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் உள்ளிட்ட உரங்கள் கையிருப்பு குறைவாக உள்ளது
தென்மேற்கு பருவமழை சிறப்பாக அமைந்ததால், யூரியாவுக்கான தேவை அதிகரிக்கும்
யூரியா இறக்குமதி அதிகரிக்கும் என்பதால், உள்நாட்டில் விலையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.