'உத்யம்' தளத்தில் சிறுதொழில் மட்டுமே அனுமதிக்க கோரிக்கை
'உத்யம்' தளத்தில் சிறுதொழில் மட்டுமே அனுமதிக்க கோரிக்கை
ADDED : ஜன 23, 2025 11:06 PM

சென்னை:'சிறு, குறு தொழில்களை முறைப்படுத்தும், 'உத்யம்' இணையதளத்தில் வர்த்தகர்களை பதிவு செய்ய அனுமதிக்க கூடாது; சேவை, உற்பத்தி சார்ந்த நிறுவனங்களை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்' என, சிறுதொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறு, குறு நிறுவனங்களை முறைப்படுத்த, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம், 2010ல் 'எஸ்.எஸ்.ஐ' சான்று வழங்கியது. பின், 'உத்யோக் ஆதார்' சான்று வழங்கப்பட்டது. அவற்றில், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மட்டும் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.
கடந்த 2019ல் உத்யம் சான்று பதிவு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சான்று பெறும் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்த சான்றுக்கு, உற்பத்தி, சேவை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி, வர்த்தக நிறுவனங்களும் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.
இதனால், சிறுதொழில் நிறுவனங்களை விட, வர்த்தக நிறுவனங்களே அதிகளவில் பதிவு செய்வதாகவும், அதனால், சிறு தொழில்களுக்கு திட்டங்களை அளிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, சிறுதொழில்கள் பதிவை மட்டுமே உத்யம் தளத்தில் அனுமதிக்க வேண்டுமென 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொது செயலர் வாசுதேவன் வலியுறுத்திஉள்ளார்.

