பிணையில்லா கடனுக்கு தங்கம், வெள்ளி ஆர்.பி.ஐ., அறிவிப்பை திரும்ப பெற கோரிக்கை
பிணையில்லா கடனுக்கு தங்கம், வெள்ளி ஆர்.பி.ஐ., அறிவிப்பை திரும்ப பெற கோரிக்கை
ADDED : மார் 01, 2026 01:16 AM

சென்னை:'வங்கிகளில் கடன் உத்தரவாத திட்டத்தில், பிணையில்லாமல் வழங்கப்படும் கடனுக்கு, கடன் கேட்பவர்கள், தன்னார்வ அடிப்படையில் தங்கம், வெள்ளியை பிணையாக வழங்கினால் ஏற்கலாம்' என்ற அறிவிப்பை திரும்ப பெறுமாறு ரிசர்வ் வங்கிக்கு, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் வாசுதேவன் கூறியதாவது:
அரசு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களுக்கு, 5 கோடி ரூபாய் வரை, பிணையில்லாமல் வழங்கப்படும் கடன் உச்சவரம்பை, 10 கோடி ரூபாயாக, மத்திய அரசு, 2025ல் உயர்த்தியது.
ஆனால், ரிசர்வ் வங்கி பிப்., 9ம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாமல் கடன் வழங்கலாம் என்றும், கடன் கேட்பவர்கள், தன்னார்வ அடிப்படையில் தங்கம், வெள்ளியை பிணையாக வழங்கினால் ஏற்கலாம் என்றும் அறிவிப்பை வெளியிட்டு வங்கிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதனால், கடன் கேட்க செல்வோரிடம், தங்கம், வெள்ளியை பிணையாக வழங்குமாறு, வங்கிகளின் அதிகாரிகள் கட்டாயப்படுத்துவர்.
இதனால், எளிதில் கடன் கிடைக்காத சூழல் உருவாகும். எனவே, தன்னார்வ அடிப்படையில் தங்கம், வெள்ளியை பிணையாக வழங்கினால் ஏற்கலாம் என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

