ADDED : ஜன 12, 2024 11:54 PM

காந்தி நகர்:குஜராத் வைப்ரன்ட் மாநாடு 2024ல் கிட்டத்தட்ட 26.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்று வந்த மாநாடு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்ததாவது:
கடந்த 2022ல் நடைபெற இருந்த மாநாடு, கொரோனா பெருந்தொற்றால் ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாநாட்டில் 57,241 திட்டங்களுக்கான, 18.87 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தற்போது நடைபெற்ற 10வது மாநாட்டில், 41,299 முதலீடு திட்டங்களுக்கான, 26.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கையெழுத்தானது.
இதன் வாயிலாக மொத்தம் 98,540 திட்டங்களுக்கான, 45 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, குஜராத் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.