UPDATED : பிப் 05, 2026 09:46 AM
ADDED : பிப் 05, 2026 03:01 AM

புதுடில்லி: இந்திய சேவை துறை நிறுவனங்களின் வளர்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி வேகம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவை துறை வளர்ச்சியை குறிக்கும் எச்.எஸ்.பி.சி., இந்தியா பி.எம்.ஐ., குறியீடு, கடந்த டிசம்பர் மாதத்தில் 58 புள்ளிகளாக இருந்தது. இது ஜனவரியில் 58.50 புள்ளிகளாக சற்றே உயர்ந்துள்ளது. இந்த குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், வளர்ச்சியையும், குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும்.
உள்நாட்டு சந்தையில் தேவை அதிகரிப்பு மற்றும் புதிய ஆர்டர்கள் வரத்து காரணமாக உற்பத்தி வேகம் கூடியுள்ளது. குறிப்பாக இந்தோனேசியா, இலங்கை போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. இந்த வளர்ச்சி காரணமாக, நிறுவனங்கள் பதியவர்கள் பணியமர்த்துவதை அதிகரித்துள்ளன.
செயல்திறன் மேம்பாடு மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் வரவு காரணமாக, எதிர்கால வணிகம் குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு மற்றும் சேவை துறைகளை உள்ளடக்கிய கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஜனவரியில் 58.40 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது முந்தைய டிசம்பர் மாதத்தில் 57.80 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

