ADDED : ஏப் 04, 2025 11:32 PM

புதுடில்லி,:உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏற்பட்ட சரிவால், கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி சற்றே குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.பி.சி., வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, மாதந்தோறும் அறிக்கை வெளியிட்டு உள்ளது. எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா நிறுவனம் இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.
மார்ச் மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் 59 புள்ளிகளாக இருந்த சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, மார்ச்சில் 58.50 புள்ளிகளாக சற்று குறைந்துள்ளது.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும் என்பதால், கடந்த மாதம் வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதே தவிர சரிவடையவில்லை.
பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச்சில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை சற்றே குறைந்திருந்தது. இதன் காரணமாக விற்பனையும் குறைந்தது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத வகையில், மார்ச்சில் பணவீக்கம் குறைந்திருந்தது. எனினும், கடந்த மாதம் புதிய பணியமர்த்தல்கள் குறைவாகவே இருந்தது. நிறுவனங்கள் இடையேயான போட்டி அதிகரித்துள்ளது, அவற்றின் வருங்கால வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கக் கூடும்.
இந்நிலையில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை குறிக்கும் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, மார்ச்சில் 59.50 புள்ளிகள் என்ற ஏழு மாத உச்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த பிப்ரவரியில் 58.80 புள்ளிகளாக இருந்தது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.