மாதவரத்தில் தகவல் தொழில்நுட்ப நகரம் சிங்கப்பூர் நிறுவனம் வடிவமைக்கிறது
மாதவரத்தில் தகவல் தொழில்நுட்ப நகரம் சிங்கப்பூர் நிறுவனம் வடிவமைக்கிறது
ADDED : ஜன 01, 2025 11:37 PM

சென்னை:சென்னை மாதவரத்தில், 'டிட்கோ' நிறுவனம், உலக தரத்தில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் திட்டத்துக்கான 'மாஸ்டர் பிளான், டிசைன் ஆகியவற்றை தயாரித்து வழங்கும் ஒப்பந்த பணிக்கான டெண்டரில், சிங்கப்பூரைச் சேர்ந்த, 'மெய்ன்ஹார்ட்' நிறுவனம் தேர்வாகியுள்ளது.
மாதவரத்தில், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், 150 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்க உள்ளது.
அங்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அந்த துறை சார்ந்த நிறுவனங்கள் தொழில் துவங்க வசதியாக, தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான தரவு மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், உலகளாவிய திறன் மையம், வணிக வளாகம், ஆய்வகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
தகவல் தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான, 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமை திட்ட அறிக்கை, வடிவமைப்பு ஆகியவற்றை தயாரித்து வழங்கும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த அக்டோபரில் 'டிட்கோ' டெண்டர் கோரியது. அதில், ஆறு நிறுவனங்கள் பங்கேற்றன.
அந்நிறுவனங்கள் வழங்கிய விபரங்களை பரிசீலனை செய்ததில் தற்போது, சிங்கப்பூரை சேர்ந்த, 'மெய்ன்ஹார்ட்' நிறுவனம் தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிக்காக தேர்வாகியுள்ள நிறுவனத்துக்கு, அடுத்த வாரத்திற்குள் ஒப்பந்த ஆணை வழங்கப்படும்.
அந்த அறிக்கை கிடைத்ததும், திட்ட செலவு இறுதி செய்யப்படும். அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்து, மாதவரத்தில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் பணியை விரைந்து துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.