ADDED : ஏப் 08, 2025 06:37 AM
புதுடில்லி; மார்ச் மாத வாகன விற்பனை தொடர்பான அறிக்கையை, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மாத விற்பனை, 0.68 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச்சில், 21.41 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த மார்ச்சில் 21.26 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2024 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2025ம் நிதியாண்டு வாகன விற்பனை, 6.46 சதவீதம் உயர்ந்து, 2.61 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறியதாவது:
மார்ச் மாதத்தின், முதல் மூன்று வாரங்களில் வாகன விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால், நவராத்திரி, ரம்ஜான் மற்றும் நிதியாண்டு இறுதி விற்பனை ஆகியவை நான்காவது வார விற்பனையை வேகப்படுத்தின.
வாகன நிறுவனங்களும், முகவர்களும் ஒன்றிணைந்து, தேவைகளை புரிந்து கொண்டு விற்பனை இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.
இருசக்கர வாகன விற்பனை குறைந்து காணப்படுகிறது. வாகன சலுகை, பண்டிகை கால தேவைகள் அதிகரித்தாலும், மந்தமான சந்தை உணர்வு நீடிக்கிறது.
இதற்கு, விலை அதிகரிப்பு, குறைந்த கிராமப்புற பணப்புழக்கம் மற்றும் நிதி வழங்குவதில் கட்டுப்பாடுகள் ஆகியவை முக்கிய காரணங்கள். குறைந்த விசாரிப்புகள், அதிகரிக்கும் செயல்பாட்டு செலவுகள் உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.