ADDED : பிப் 20, 2026 01:55 AM

டாக்கா: வான்வெளியை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை செலுத்தாததால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வான்வெளி மற்றும் விமான நிலையங்களை பயன்படுத்த வங்க தேசம் தடை விதித்துள்ளது.
இதனால் கொல்கட்டாவில் இருந்து குவஹாத்தி, இம்பால் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள், மாற்றுப்பாதையாக நீண்ட வழித்தடங்களை பயன்படுத்த நேரிட்டுள்ளது.
புதிய பாதையில் பயணிக்கும் போது எரிபொருள், உள்ளிட்ட செலவுகள் அதிகமாகும் என விமான போக்குவரத்து துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்த கட்டண பயணியர் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் வங்க தேச வான்வெளி கட்டணம் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் உள்ளதை இது காட்டுகிறது.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கட்டண நிலுவை தொகை மற்றும் விமான நிலைய பயன்பாடு குறித்து வங்கதேச அதிகாரிகளுடன் பேச்சு நடைபெறுவதாகவும், இந்த வழக்கமான தொழில்துறை பிரச்னைக்கு தீர்வை காண ஆக்கப்பூர்வமாக செயல்படுவதாகவும் கூறி உள்ளது.
மேலும் பயணியர் விமான இயக்கத்தில் சிக்கல் ஏதும் இல்லை என்றும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த டிச., வரையிலான மூன்று மாதங்களில் இந்நிறுவனம், 239.27 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த நிலையில் பல்வேறு நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

