ADDED : ஜூன் 26, 2025 01:37 AM

அமைதி தந்த ஏற்றம்
வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி, சென்செக்ஸ் ஏற்றத்துடன் நிறைவு செய்தன. இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் காரணமாக, மத்திய கிழக்கில் அமைதி திரும்பியதை தொடர்ந்து, அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் 4 மாதங்களில் காணாத உயர்வுடன் நிறைவடைந்தன.
இதன் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் துவங்கிய போதே, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து, அன்னிய முதலீடுகள் வெளியேறிய போதிலும், உலகளாவிய சந்தைப்போக்கு, தென்மேற்குபருவமழை முன்கணிப்பு சாதகம் ஆகிய காரணங்களால், நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீத உயர்வு கண்டன.இரண்டாவது நாளாக, சந்தை குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன
உலக சந்தைகள்
செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, தென்கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., என அனைத்துகுறியீடுகளும் உயர்வுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையுடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1மத்திய கிழக்கில் மீண்டும் அமைதி திரும்பியது.
2உலகளாவிய சந்தைகளில் சாதகமான சூழல்.
3தென்மேற்கு பருவமழை முன்கணிப்பு சாதகம்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 2,428 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.21 சதவீதம் அதிகரித்து, 67.95 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து, 86.08 ரூபாயாக இருந்தது.