'ஜெம் போர்ட்டல்' பதிவுக்கு சென்னையில் மையம் தமிழக தொழில்முனைவோர் எதிர்பார்ப்பு
'ஜெம் போர்ட்டல்' பதிவுக்கு சென்னையில் மையம் தமிழக தொழில்முனைவோர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 04, 2025 12:28 AM

சென்னை:பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக பொருட்களை விற்க, மத்திய அரசின், 'ஜெம் போர்ட்டலில்' விண்ணப்பிக்கும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தமிழக சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன.
சென்னையில் அதன் அலுவலகமும், மாவட்டத்திற்கு தலா ஒரு உதவி மையமும் அமைக்கப்படுமா என, எதிர்பார்க்கின்றன. மத்திய அரசின் பொது கொள்முதல் கொள்கையின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள், தங்களின் ஆண்டு மொத்த கொள்முதலில், 25 சதவீதத்தை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து கட்டாயம் வாங்க வேண்டும்.
அதில், 4 சதவீதம் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தொழில்முனைவோரிடம் இருந்தும், 3 சதவீதம் மகளிர் தலைமையில் செயல்படும் நிறுவனங்களிடம் இருந்தும் வாங்க வேண்டும். அதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள், ஜெம் போர்ட்டல் வாயிலாக பொருட்களை வாங்க, டெண்டர் கோருகின்றன.
இந்த போர்ட்டலில் பதிவு செய்ய சிரமம் ஏற்படுவதால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை விற்க முடியாமல் தமிழக சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு தீர்வு காண, ஜெம் போர்ட்டல் அலுவலகத்தை சென்னையில் துவக்க, மத்திய அரசுக்கு சிறு தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் தலைவர் வாசுதேவன் கூறியதாவது:
மத்திய அரசு திட்டங்களின் பயனைப் பெற, இணையதளத்ததில் விண்ணப்பம் செய்வது உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வரவேற்கிறோம்.
அதேசமயம், அதில் ஏற்படும் பிரச்னைகளை விரைந்து களைய வேண்டும். சிறு நிறுவனங்கள் பலவற்றுக்கு, ஜெம் போர்ட்டலில் பதிவு செய்ய தெரியவில்லை.
ஆதார் எண், பான் எண் சரியாக இருந்தாலும், பதிவிடும் போது, சிலநேரம் ஏற்கப்படுவதில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூட தெரியவில்லை.
ஒரு நிறுவனம் என்னென்ன பொருட்கள் உற்பத்தி செய்கிறது என்ற விபரம் அடங்கிய அட்டவணையை உருவாக்க பலருக்கு தெரிவதில்லை.
எனவே, ஜெம் போர்ட்டல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, அதன் அலுவலகத்தை, சென்னையிலும் மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இதுதவிர, பதிவு செய்வது, டெண்டரில் பங்கேற்பது உள்ளிட்டவை தொடர்பாக, தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்க மாவட்டங்களில் உதவி மையம், மொபைல் செயலியையும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

