புதுப்பிக்கத்தக்க மின் வணிகத்தில் தமிழக பசுமை எரிசக்தி கழகம்
புதுப்பிக்கத்தக்க மின் வணிகத்தில் தமிழக பசுமை எரிசக்தி கழகம்
ADDED : ஏப் 26, 2025 12:39 AM

சென்னை:சூரியசக்தி, காற்றாலையை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின் வினியோக நிறுவனங்களுக்கு விற்கும் வணிகத்தில், தமிழக பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்திற்குள் ஈடுபட, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு உள்ளது.
உலகம் முழுதும் புதுப்பிக்கத்தக்க மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மின் தேவையை பூர்த்தி செய்வதில், புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுதுமாக பயன்படுத்த முன்னுரிமை அளிக்குமாறு, மாநில மின் வாரியங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலேயே, காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவுவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் 2030க்குள் தமிழக மொத்த மின் பயன்பாட்டில், புதுப்பிக்கத்தக்க மின்சார பங்கை, 50 சதவீதமாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமாக இருந்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து, தமிழக பசுமை எரிசக்தி கழகம் எனும் தனி நிறுவனம் கடந்த ஆண்டு துவக்கப் பட்டது.
தற்போது, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின் வாரியம் உள்ளிட்ட மின் வினியோக நிறுவனங்களுக்கு விற்கும் வணிகத்தில், தமிழக பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட உள்ளது.