ADDED : செப் 07, 2025 01:37 AM

புதுடில்லி:முக்கிய வேளாண் இடுபொருட்களான உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைத்து இருப்பதற்கு, இந்திய விதை தொழில் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அஜய் ராணா தெரிவித்துள்ளதாவது:
ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் வாயிலாக, இந்திய வேளாண் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை அரசு நேரடியாக வலுப்படுத்தி உள்ளது. இதேபோன்ற சீர்திருத்தத்தை விதை துறையிலும் கொண்டு வர வேண்டும்.
சில விதை ரகங்களுக்கு வரி அமலில் உள்ள நிலையில், சிலவற்றுக்கு முழு விலக்கு அளிக்கப்படுகிறது. விதைகளின் பேக்கிங், போக்குவரத்து மற்றும் கிடங்கு ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டுமென்பதால், வரி விலக்கில் விதைகள் இருந்தாலும், வரிச்சுமை ஏற்படுகிறது.
எனவே, அனைத்து விதை உற்பத்திக்கும் ஜி.எஸ்.டி.,யில் இருந்து முழு விலக்கு அல்லது குறைந்தபட்ச ஜி.எஸ்.டி.,யை நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.