அறிவுசார் நகரில் ரூ.90 கோடியில் உள்கட்டமைப்பு பணிக்கு 'டெண்டர்'
அறிவுசார் நகரில் ரூ.90 கோடியில் உள்கட்டமைப்பு பணிக்கு 'டெண்டர்'
ADDED : செப் 25, 2025 02:02 AM

சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள அறிவுசார் நகரில், 90 கோடி ரூபாயில் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள, 'சிப்காட்' நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
தமிழகத்தில் உயர் கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உருவாக்க, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் செங்காத்தக்குளம், மேல்மலிகைப்பட்டு கிராமங்களில், 870 ஏக்கரில் அறிவுசார் நகரை, தமிழக அரசு அமைக்க உள்ளது.
இதற்கான பணிகளை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
அறிவுசார் நகரில் தொழில் துவங்க தேசிய, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அறிவுசார் நகரில் முதல் கட்டமாக, 415 ஏக்கரில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி தற்போது, 89.90 கோடி ரூபாய் செலவில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால், தண்ணீர் வினியோகம், கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'சிப்காட்' 'டெண்டர்' கோரியுள்ளது.