ADDED : ஏப் 12, 2025 12:56 AM

1.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்கள் வரையிலான நாட்டின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 54 சதவீதம் அதிகமாகும்.
மொத்த ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவன ஏற்றுமதியாளர்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் பங்கு மட்டுமே கிட்டத்தட்ட 50 சதவீதமாக இருந்தது.
55 லட்சம் ரூபாயை சைபர் தாக்குதலால் இழந்துள்ளது பொதுத்துறை நிறுவனமான, எச்.ஏ.எல்., எனும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ். மூன்று போர் விமான பாகங்கள் வாங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த 'பி.எஸ்., இன்ஜினியரிங்' எனும் நிறுவனத்துடன் மின்னஞ்சல் வாயிலாக தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.
இதே மின்னஞ்சல் முகவரியில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றி போலி மின்னஞ்சல் வந்துள்ளது. இது பற்றி அறியாத எச்.ஏ.எல்., நிறுவனம், போலி மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட வங்கி கணக்குக்கு 55 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
17,400 கோடி ரூபாய் மதிப்பிலான, இந்தியாவில் உள்ள நீர் மற்றும் சூரியசக்தி மின்சார சொத்துகளை விற்க, நார்வே அரசு நிறுவனமான 'ஸ்டேட்கிராப்ட்' திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் விதமாக, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே முதலீடுகளை கொண்டிருக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழகம், ராஜஸ்தான், ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள மின்சார திட்டங்கள் விற்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
22 கோடி நடப்பாண்டு ஏப்ரலில் 22 கோடி முதலீட்டாளர்கள் கணக்குகளுடன் என்.எஸ்.இ., புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மொத்த முதலீட்டாளர்களின் கணக்குகள், தனித்துவமான கிளையன்ட் குறியீடுகள் வாயிலாக இது அளவிடப்படுகிறது. நடப்பாண்டு ஏப்ரலில், அதாவது இம்மாதம் முதலீட்டாளர்களின் கணக்கு எண்ணிக்கை 22 கோடி தாண்டியுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் 20 கோடியை தாண்டியிருந்த நிலையில், அடுத்த நான்கு மாதங்களில் 2 கோடி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.
33 லட்சம் நடப்பு 2024 - 25 பருத்தி பருவத்தில், உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்ததால், இந்தியாவின் பருத்தி இறக்குமதி 33 லட்சம் பேல்களாக இருக்கும் என, இந்திய பருத்தி சங்கம் மதிப்பிட்டுள்ளது. மார்ச் இறுதி வரை கிட்டத்தட்ட
25 லட்சம் பேல்கள் :இந்திய துறைமுகங்களை வந்தடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உ ள்ளது. கடந்த பருவத்தில், பருத்தி இறக்குமதி 15.20 லட்சம் பேல்களாக இருந்தது. ஒரு பேல் என்பது 170 கிலோ எடை கொண்டதாகும்.
65,74,000 கோடி கடந்த மார்ச் மாதத்தில், மியூச்சுவல் பண்டு துறையால் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்துக்களின் மதிப்பு, 65.74 லட்சம் கோடியாக உயர்ந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்திய மியூச்சுவல் பண்டு சங்கமான 'ஆம்பி' தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரியில் 64.53 லட்சம் கோடியில் இருந்து மார்ச்சில் இது 7.60 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. சந்தைகள் தொடர் சரிவுக்கு இடையிலும் மியூச்சுவல் பண்டு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.