துாத்துக்குடி அல்லிகுளத்தில் விண்வெளி தொழில் பூங்கா 250 ஏக்கரில் 'டிட்கோ' அமைக்கிறது
துாத்துக்குடி அல்லிகுளத்தில் விண்வெளி தொழில் பூங்கா 250 ஏக்கரில் 'டிட்கோ' அமைக்கிறது
ADDED : நவ 05, 2025 11:59 PM

சென்னை:துாத்துக்குடியில் விண்வெளி துறைக்கான சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, அம்மாவட்டத்தின் அல்லிகுளத்தில், 250 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்காவை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்க முடிவு செய்துள்ளது.
விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களின் ராக்கெட் ஏவுதலுக்காக, துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், 'இஸ்ரோ' ஏவுதளத்தை அமைத்து வருகிறது.
தமிழகத்தில், விண்வெளி துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க குலசேகரன்பட்டினம் அருகில், 2,000 ஏக்கரில் விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்காவை, 'டிட்கோ' நிறுவனம் அமைக்க முடிவு செய்துள்ளது.
அதில், 500 ஏக்கரில் ராக்கெட், செயற்கைக்கோள் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான தனி தொழில் பூங்காவும், மீதமுள்ள இடத்தில் திட மற்றும் திரவ எரிபொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான உந்துசக்தி தொழில் பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டது.
துாத்துக்குடியில் உள்ள அல்லிகுளத்தில், 1,966 ஏக்கரில் தொழில் பூங்காவை, 'சிப்காட்' அமைக்கிறது. இந்த பூங்கா வளாகத்திலேயே, 250 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்காவை அமைக்க, 'டிட்கோ' முடிவு செய்துள்ளது.
இதனால், ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, திட மற்றும் திரவ எரிபொருள், அருகிலேயே கிடைக்கும். சாலை வழியாக கொண்டு செல்வதில் உள்ள விபத்து அபாயமும் இருக்காது.

