ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு திருப்பூர் பின்னலாடை அதிக பங்களிப்பு
ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு திருப்பூர் பின்னலாடை அதிக பங்களிப்பு
ADDED : அக் 19, 2025 03:12 AM

திருப்பூர்: 'டாப் 10' நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது; அதிகபட்சமாக, போலந்துக்கு ஆடை ஏற்றுமதி 35 சதவீதம் உயர்ந்து உள்ளது.
நம் நாட்டில், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களான, ஏப்., - ஜூலை, 47,124 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது; இதில், 'டாப் 10' நாடுகளுக்கு மட்டும், 36,354 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கை நீண்ட இடைவெளிக்கு பின், போலந்து, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், போலந்துக்கு ஏற்று மதி 856 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்தாண்டு, 1,175 கோடியாக உயர்ந்துள்ளது; இது, 37.70 சதவீதம் அதிகம்.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான ஏற்றுமதி 3,125 கோடியில் இருந்து, 3,740 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது; இது, 18 சதவீதம் அதிகம்.
இத்தாலிக்கு ஏற்றுமதி, 951 கோடி ரூபாயில் இருந்து, 1,122 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது; இது, 16 சதவீதம் அதிகம்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இருந்து வந்த ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட நாடுகளுக்கும், இந்திய ஆடை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவுடனான தற்காலிக வர்த்தக இழப்பை விரைவில் சரிக்கட்டி விடலாம் என்று, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., அதிகாரி கள் கூறுகையில், 'நடப்பு நிதியாண்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், போலந்து, இத்தாலி, சவூதி அரேபியா ஆகியவை, 'டாப் 10' நாடுகள் பட்டியலில் இருக்கின்றன.
ஏப்., துவங்கி ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், அனைத்து நாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி முன்பு இருந்தை காட்டிலும் அதிகரித்துள்ளது' என்றனர்.