பயிர் சேதத்துக்கு ஒரு ரூபாய் இழப்பீடு காப்பீடு நிறுவனங்களின் அலட்சியம் விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அமைச்சர்
பயிர் சேதத்துக்கு ஒரு ரூபாய் இழப்பீடு காப்பீடு நிறுவனங்களின் அலட்சியம் விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அமைச்சர்
ADDED : நவ 05, 2025 12:04 AM

புதுடில்லி:பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஒரே ஒரு ரூபாயை கொடுத்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
குறைந்த செலவில் விவசாய பயிர்களுக்கு காப்பீடு வசதி அளிப்பதற்காக 2016ம் ஆண்டின் காரிப் பருவத்தின்போது பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விதைப்புக்கு முன்பு தொடங்கி அறுவடைக்கு பிந்தைய காலம்வரை இயற்கை சீற்றங்களால் பயிர் சேதம் ஏற்பட்டால், இத்திட்டத்தில் இழப்பீடு பெறலாம்.
இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகாராஷ்டிர விவசாயிகளிடம் ஆன்லைன் வழியாக அவர் கலந்துரையாடினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ரூபாய், மூன்று ரூபாய், 21 ரூபாய் என்று பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்கியிருப்பதாக விவசாயிகள் என்னிடம் புகார் தெரிவித்தனர்.
இது, விவசாயிகளைக் கிண்டல் செய்வதுபோல் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க ஒருபோதும் மத்திய அரசு அனுமதிக்காது. இவ்வாறு செய்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ரூபாய், மூன்று ரூபாய், 21 ரூபாய் என்று பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்கியிருப்பதாக அமைச்சரிடம் விவசாயிகள் புகார் விவசாயிகளை கிண்டல் செய்வது போல் காப்பீடு நிறுவனங்களின் செயல் இருப்பதாக அமைச்சர் அதிருப்தி
சாராம்சம்:
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தில், காப்பீடு நிறுவனங்கள் சிலரது பயிர் பாதிப்புக்கு ஒரு ரூபாய் முதல் 21 ரூபாய் வரை மட்டும் இழப்பீடு வழங்கியதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது விவசாயிகளை கிண்டல் செய்யும் செயல் என அதிருப்தி தெரிவித்த அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

