தனிநபர் கடன் வசதியை சிறந்த முறையில் பயன்படுத்தும் வழிகள்
தனிநபர் கடன் வசதியை சிறந்த முறையில் பயன்படுத்தும் வழிகள்
ADDED : ஜூன் 22, 2025 07:46 PM

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு சில்லரை பணவீக்க விகிதம் குறைந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளதை தொடர்ந்து, கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைத்து வருகின்றன. இதனால், தனிநபர் கடன் வசதி பலருக்கும் ஈர்ப்புடையதாக மாறியுள்ளது.
வட்டி விகிதநோக்கில் தனிநபர் கடனை நாடுவது ஏற்றதாக அமைந்தாலும், வாங்கும் கடனை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில், தனிநபர் கடனை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழிகள் சில:
அவசர தேவை:
மருத்துவ அவசர தேவை அல்லது எதிர்பாராத வேலையிழப்பு மாத செலவுகளை எதிர்கொள்வதில் பெரும் பாதிப்பை உண்டாக்கலாம். இது போன்ற நேரங்களில் தனிநபர் கடன் வசதியை நாடலாம். இதன் மூலம், அவசர தேவைக்காக முதலீடுகளை விலக்கிக் கொள்வதை தவிர்க்கலாம்.
வட்டி விகிதம்:
ரிசர்வ் வங்கி ரெப்போ விகித குறைப்பை அடுத்து, தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து வருகிறது. வலுவான கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்கள் சாதகமான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும். ஏற்கனவே உள்ள கடனை சீரமைக்க அல்லது முக்கிய செலவை மேற்கொள்ள தனிநபர் கடனை பரிசீலிக்கலாம்.
அதிக வட்டி கடன்:
கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட அதிக வட்டி கடன் இருந்தால் அவற்றை பைசல் செய்யவும் தனிநபர் கடனை நாடலாம். கடன்களை அடைத்து ஒரே கடனை நிர்வகிப்பது எளிது. மேலும், தனிநபர் கடனுக்கான மாதத் தவணை நிலையானது என்பதால், பணம் செலுத்தலை திட்டமிடுவதும் சாத்தியம்.
முக்கிய செலவுகள்:
தனிநபர் கடனை எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டு சீரமைப்பு போன்ற முக்கிய செலவுகள் காத்திருந்தால், தனிநபர் கடன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். சேமிப்பு போன்றவற்றை பாதிக்காமல் முக்கிய செலவுகளை மேற்கொள்ளஇது உதவும்.
வாழ்வியல் செலவுகள்:
விருப்பம் போல பயன்படுத்தலாம் என்றாலும், தனிநபர் கடனை வாழ்வியல் தேவைக்காக நாடுவதை தவிர்க்க வேண்டும். புதிய விலை உயர்ந்த போன் வாங்குவது, ஆடம்பர செலவுகளை மேற்கொள்ள தனிநபர் கடனை நாடுவது தவறானது. இதனால், கடன் வலையில் சிக்க நேரலாம்.