ADDED : நவ 14, 2024 11:13 PM

புதுடில்லி:நாட்டின் மொத்த விலை பணவீக்கம், நான்கு மாத உச்சம் கண்டு, அக்டோபரில் 2.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் குறிப்பாக, காய்கறிகளின் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 1.84 சதவீதமாகவும்; கடந்தாண்டு அக்டோபரில் மைனஸ் 0.26 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த மாதத்தை பொறுத்தவரை, உணவு பொருட்கள் பிரிவில் பணவீக்கம் 13.54 சதவீதமாகவும்; காய்கறிகள் பிரிவில் 63.04 சதவீதமாகவும் அதிகரித்தது. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்ததே இதற்கு காரணம். தயாரிப்பு துறையில் பணவீக்கம் 1.50 சதவீதமாக இருந்தது. எரிசக்தி மற்றும் மின்சார துறையில் பணவாட்டமே நிலவியது.
இதற்கிடையே, வலுவான கரீப் பருவ சாகுபடி, ராபி பருவ விதைப்புக்கு சாதகமான சூழல், நல்ல பருவமழை காரணமாக அதிகரித்துள்ள நீர்நிலைகளின் இருப்பு ஆகியவற்றின் காரணமாக, அடுத்த சில மாதங்களில், மொத்த விலை பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.