ஐ.பி.ஓ., எஸ்... என்.எப்.ஓ., நோ மாறி வரும் முதலீடடாளர் மன நிலை
ஐ.பி.ஓ., எஸ்... என்.எப்.ஓ., நோ மாறி வரும் முதலீடடாளர் மன நிலை
UPDATED : ஆக 29, 2026 03:05 AM
ADDED : ஆக 29, 2026 02:41 AM

இந்திய முதன்மை சந்தையில் ஐ.பி.ஓ.,க்களுக்கு முதலீட்டாளர்களிடம் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் புதிய திட்டங்களான என்.எப்.ஓ.,க்களில் முதலீடு மந்தமாகியிருப்பது, தரவுகளில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 'பிரைம் டேட்டாபேஸ்' தெரிவித்ததாவது:
அமெரிக்காவின் வரி தொடர்பான பிரச்னைகள், மேற்கு ஆசிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால், 2026ம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிடுவதில் தயக்கம் காட்டின. இந்நிலையில், சந்தை சூழல் மேம்பட்டதையடுத்து சமீபகாலமாக ஐ.பி.ஓ., சந்தை மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் 33 ஐ.பி.ஓ.,க்கள் வாயிலாக 49,592 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
மேலும், செபி ஒப்புதல் பெற்றுள்ள பல நிறுவனங்களின் அனுமதி காலாவதியாகும் நிலையில் இருப்பதால், நீண்ட காலமாக காத்திருந்த ஐ.பி.ஓ.,க்களும் தற்போது சந்தைக்கு வர தொடங்கியுள்ளன. செபி ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, நேற்று 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி வழங்கியுள்ள நிலையில், 'என்.எஸ்.இ.,' 'ரேசர்பே' உள்ளிட்ட நிறுவனங்களின் ஐ.பி.ஓ.,க் களும் வரவிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மறுபுறம், என்.எப்.ஓ., சந்தையில் நிலைமை மாறுபட்டுள்ளது. 'ஆம்பி'யின் தரவுகளின்படி, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் என்.எப்.ஓ.,க்கள் வாயிலாக திரட்டப்பட்ட தொகை 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தொடர்ந்து 3வது காலாண்டாக என்.எப்.ஓ., வசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது.
புதிய திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், அவற்றில் முதலீடு செய்யும் ஆர்வம் முதலீட்டாளர்களிடம் குறைந்திருப்பது தெரிகிறது.
அதேநேரம், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மியூச்சுவல் பண்டு திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யும் பழக்கம் வலுவாகவே உள்ளது தரவுகளில் தெரியவந்துள்ளது.
ஐ.பி.ஓ., வெளியிடும் நிறுவனத்தின் நிதிநிலை, செயல்பாடு உள்ளிட்ட விபரங்கள் முதலீட்டாளர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். அதோடு, பட்டியலிடும் நாளிலேயே
லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதால் ஐ.பி.ஓ.,க்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. ஆனால், என்.எப்.ஓ.,வில் எதிர்கால செயல்பாடு எப்படி இருக்கும் என்பது முன்கூட்டியே தெரியாது. பண்டு மேலாளர், முதலீட்டு உத்தி, செயல்பாடு ஆகியவற்றை மதிப்பிடவும் காலம் தேவைப்படுகிறது. என்.எப்.ஓ.,வை விட, பட்டியலிடப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வது எனக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது. முதலீடு செய்வதற்கு முன் வினியோகஸ்தரின் ஆலோசனையையும் கருத்தில் கொள்கிறேன்.
- சுரேஷ் தியாகராஜன், முதலீட்டாளர்,
காரப்பாக்கம், சென்னை
![]() |

