ADDED : மே 23, 2026 11:50 PM

ஐ.சி.ஐ.சி.ஐ.,
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சி.இ.ஓ., ஆக சந்தீப் பக் ஷியை மீண்டும் நியமிக்க ஆர்.பி.ஐ., அனுமதி அளித்துள்ளது. இவரது புதிய பதவிக்காலம் 2026 அக்., 4 தொடங்கி, 2028 அக்., 3 வரை நீடிக்கும். வங்கியின் இயக்குநர் குழு எடுத்த ஒருமனதான முடிவை அடுத்து, மத்திய வங்கி இந்த ஒப்புதலை தற்போது வழங்கி உள்ளது.
ஆந்த்ரோபிக்
'க்ளாட்' ஏ.ஐ., தளத்தை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனம், கிட்டத்தட்ட 86 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்ட உள்ளது. இது, ஓபன் ஏ.ஐ., நிறுவன மதிப்பை விட அதிகமாகும். முதலீட்டாளர்களின் பலத்த ஆதரவு காரணமாக, சில வாரங்களிலேயே இந்நிறுவனம் அதிக நிதியை திரட்டி உள்ளது.
ரயில்டெல்
ரயில்டெல் நிறுவனம், நியூஸ்பேஸ் இந்தியா அமைப்பிடமிருந்து 31.21 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதன் வாயிலாக, நியூஸ்பேஸ் நிறுவன ஐ.டி., உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை, 2027 ஜனவரி 31க்குள் ரயில்டெல் நிறுவனம் முடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிண்டால்கோ
அமெரிக்க துணை நிறுவனமான நோவெலிஸ் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹிண்டால்கோ நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு நிகர லாபம் 16 சதவீதம் சரிந்து 13,391 கோடி ரூபாயாக உள்ளது. இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட கூடுதல் செலவுகள் நிறுவனத்தின் லாபத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது.
எல்.ஐ.சி.,
கடந்த நிதியாண்டில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ள எல்.ஐ.சி., நிறுவனம், வரும் 2026 - 27ம் நிதியாண்டில், இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது. பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகள் மற்றும் கூடுதல் லாப பங்குகள் வழங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
