கடனுக்கான வட்டி இனி அடிக்கடி உயராது அறிமுகமாகிறது புதிய கணக்கீட்டு முறை - ஆர்.பி.ஐ.,யின் புதிய வரைவு அறிக்கை வெளியீடு
கடனுக்கான வட்டி இனி அடிக்கடி உயராது அறிமுகமாகிறது புதிய கணக்கீட்டு முறை - ஆர்.பி.ஐ.,யின் புதிய வரைவு அறிக்கை வெளியீடு
ADDED : ஆக 16, 2026 03:43 AM

வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் முறையில் மேலும் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர ஆர்.பி.ஐ., புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, வங்கிகள் தங்களின் நிதி திரட்டும் செலவை அடிப்படையாக கொண்டு கணக்கிடும் 'எம்.சி.எல்.ஆர்.,' வட்டி விகிதத்தை கணக்கிட, இனி கடந்த 3 மாதங்களின் சராசரி நிதி செலவு முறையை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறைகள் வருகிற 2027ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், ஏற்கனவே உள்ள கடன்களை புதிய வட்டி கட்டமைப்புக்கு மாற்ற 2029 ஏப்ரல் 1ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது எனவும் ஆர்.பி.ஐ., தெளிவுபடுத்தி உள்ளது.
தற்போதைய முறை இதுவரை ஒரு குறிப்பிட்ட நாளில் வங்கிகளுக்கு எவ்வளவு செலவானதோ, அதை வைத்து மட்டுமே கடனுக்கான வட்டியை நிர்ணயித்தன. இதனால், அந்த நாளில் தற்காலிகமாக நிதி செலவு உயர்ந்தாலும் கடன்களுக்கான வட்டி உடனே உயர்த்தப்பட்டது. ஆனால், செலவு குறையும் போது வாடிக்கையாளர்களுக்கு வட்டி குறைப்பின் பலன் உடனே போய் சேராது.
புதிய முறை இனி ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் கணக்கில் எடுக்க முடியாது. கடந்த 3 மாதங்களில் வங்கிகள் பெற்ற டிபாசிட் மற்றும் கடன்களின் சராசரி வட்டி செலவை மட்டுமே அடிப்படையாக கொள்ள வேண்டும். இந்த வட்டி விபரங்களை வங்கிகள் தாங்களாகவே கணக்கிட முடியாது. அனைத்தும் கணினி மூலமாகவே சேகரிக்கப்பட்டு, எவரும் சரிபார்க்கும் வகையில் வெளிப்படையாக வெளியிடப்படும்.
என்ன பயன்? வங்கிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்களை மாற்றுவது முற்றிலுமாக தடுக்கப்படும்
சந்தையில் திடீரென வட்டி உயர்ந்தாலும், 3 மாத சராசரி கணக்கிடப்படுவதால் கடன் வட்டி ஒரே அடியாக உயர போவதில்லை
வங்கிகளின் நிதி செலவு உண்மையிலேயே குறையும் போது, வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி சீராகவும் நியாயமாகவும் குறையும்.
