ADDED : பிப் 16, 2026 01:36 AM

எ ப்.பி.ஐ., எனும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், இந்திய பங்குகளில் இம்மாதம் மட்டும் கடந்த 13ம் தேதி வரை 19,675 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
அதீத சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக கடந்த சில மாதங்களாகவே அதிகளவிலான இந்திய பங்குகளை விற்பனை செய்து வந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போன்ற காரணங்களால், இம்மாதம் மீண்டும் முதலீட்டை அதிகரிக்க துவங்கிஉள்ளனர்.
கடந்த ஜனவரியில் 35,962 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்பனை செய்திருந்த அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள், கடந்தாண்டு முழுதும் மொத்தம் 1.66 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தனர்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், சந்தைக்கு ஆதரவான மத்திய பட்ஜெட் 2026, உலக அளவில் வர்த்தக அச்சங்கள் தளர்ந்திருப்பது மற்றும் உள்நாட்டு வட்டி விகிதங்கள் நிலையானதாக இருப்பது போன்ற காரணங்களால் எப்.பி.ஐ., முதலீடு இந்திய பங்குச்சந்தைக்குள் அதிக அளவில் வர ஆரம்பித்திருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

