ஓராண்டில் சென்செக்ஸ் 1,07,000 புள்ளியை எட்டும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் கணிப்பு
ஓராண்டில் சென்செக்ஸ் 1,07,000 புள்ளியை எட்டும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் கணிப்பு
ADDED : நவ 19, 2025 04:02 AM

அடுத்த ஆண்டு இறுதிக்குள், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,07,000 புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ளதாக, சர்வதேச முதலீட்டு நிறுவனமான, 'மோர்கன் ஸ்டான்லி' கணித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டில், இந்திய பங்குச் சந்தைகள் மந்தமாக இருந்த நிலையில், அடுத்த ஆண்டில் மீண்டும் உயர்வதற்கான அடிப்படை வலுவாக அமைந்திருக்கிறது.
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள், 95,000 முதல் 1,07,000 புள்ளிகளுக்குள் சென்செக்ஸ் வர்த்தகமாக சாத்தியகூறுகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில் இருந்து 13 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
உள்நாட்டில், மியூச்சுவல் பண்டுகள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருவது, சந்தைக்கு பெரிய பலத்தைக் கொடுத்து வருகிறது. இந்திய பங்குச் சந்தைகள், வெளிநாட்டு முதலீடுகளை சார்ந்து இருப்பது குறைந்து உள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது.
வரும் 2028ம் ஆண்டு வரை, நிறுவனங்கள் ஆண்டுக்கு 17 முதல் 19 சதவீதம் வரை லாபத்தை ஈட்ட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் குறைவு, ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகித குறைப்பு மற்றும் அரசின் கொள்கைகளால், இந்திய பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் இருப்பது, சந்தையில் அபாயங்களைக் குறைத்துள்ளன.
அதேநேரம், உலகளாவிய பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் விலை 100 டாலரை தாண்டுவது போன்றவை ஏற்பட்டால் அது, இந்திய பங்கு சந்தைகளுக்கு சவாலாக அமையலாம்.
மிக மோசமான அளவில் பொருளாதார சூழல்கள் ஏற்படின், சென்செக்ஸ் 76,000 புள்ளிகள் வரை கீழே சரிய வாய்ப்புள்ளது.
இவ்வாறு மோர்கன் ஸ்டான்லி தெரிவித்து உள்ளது.
மற்றொரு ஆய்வு நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ், அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிப்டி 29,000 புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ளதாக கணித்திருப்பதும் கவனிக்கதக்கது.
மிக மோசமான அளவில் பொருளாதார சூழல்கள் ஏற்படின், சென்செக்ஸ் 76,000 புள்ளிகள் வரை கீழே சரிய வாய்ப்புள்ளது.

