UPDATED : ஜூலை 07, 2026 07:25 AM
ADDED : ஜூலை 07, 2026 07:21 AM

நேற்று 36 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி தொடர்ந்து மேல் நோக்கி சென்று 184 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் சிறிதளவு இறங்கி நாளின் இறுதியில் 159 புள்ளிகள் அதிகரித்தே முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் உயர்வுடன் முடிந்தன.
இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு குறைந்தபட்சமாக 0.21 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 1.14 சதவீதமும் உயர்வுடன் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 16 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் காணப்பட்டன.
இவற்றில், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 1.81 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 0.95 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,462 நிறுவனங்களின் பங்குகளில் 1,578 ஏற்றத்துடனும்; 1,769 இறக்கத்துடனும்; 115 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்தன.
நிப்டி குறுகிய மற்றும் மத்திம கால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்திருப்பது ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்பதை காட்டுவதாய் இருக்கிறது. 200 நாள் இ.எம்.ஏ.,க்கு சிறிது மேலே நிப்டி நிறைவடைந்திருப்பது மத்திம கால டிரெண்டு மீண்டும் புல்லிஷாக மாறுவதற்கான முக்கியமான அறிகுறியாக தென்படுகிறது.
மொமென்டம் இண்டிக்கேட்டர்கள் ஏற்றத்திற்கு ஆதரவாக இருக்கிற போதிலும் ஸ்டொக்காஸ்டிக் ஆசிலேட்டர் சிறிதளவு ஓவர் பாட் நிலைமைதனை அடைந்துள்ளது என்பது குறுகிய காலத்தில் கன்சாலிடேஷன் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்த்துகிறது.

இருப்பினும், 24,300க்கு மேல் இருக்கும் வரை அது ஆரோக்கியமான கன்சாலிடேஷனாகவே பார்க்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் 24,300ல் உடனடி சப்போர்ட் இருக்கிறது. அதன் பின்னால் 24,000த்தில்தான் வலுவான சப்போர்ட் இருக்கிறது. 24,500 - 24,600 லெவல்தனில் உடனடி ரெசிஸ்டென்ஸ் தென்படுகிறது. நிப்டி 24,300க்கு மேலே இருக்கும் வரையில் டிரெண்டு புல்லிஷாக இருக்க வாய்ப்புள்ளது. ஏற்றம் தொடர்ந்தால் 24,750 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
