கடன் வளர்ச்சி அதிகரித்தும் தனியார் வங்கி பங்குகள் வீழ்ச்சி
கடன் வளர்ச்சி அதிகரித்தும் தனியார் வங்கி பங்குகள் வீழ்ச்சி
UPDATED : ஜூலை 21, 2026 06:47 AM
ADDED : ஜூலை 21, 2026 06:46 AM

கடன்கள் வழங்குவது கணிசமாக அதிகரித்த போதிலும், நிகர வட்டி லாபம் குறைந்ததாலும், குறைந்த வட்டி வழங்கும் வைப்புத்தொகைகள் சரிந்ததாலும் நேற்றைய வர்த்தகத்தில் முன்னணி தனியார் வங்கிகளின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இதன்காரணமாக, 'ஹெச்.டி.எப்.சி., வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி' ஆகியவற்றின் சந்தை மதிப்பில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 95,000 கோடி ரூபாய்க்கும் மேல் சரிவு ஏற்பட்டது.
இருப்பினும், சீரான கடன் வளர்ச்சி மற்றும் நிலையான லாப வரம்பால் 'ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி' இந்த வீழ்ச்சியிலிருந்து தப்பி உயர்வை கண்டுள்ளது.
வீழ்ச்சிக்கு காரணங்கள்
பெருநிறுவனங்களுக்கான கடன்கள் வேகமாக அதிகரித்தாலும், அவற்றின் வாயிலாக கிடைக்கும் நிகர வட்டி வருமானம் குறைந்தது
அதிக வட்டி வருவாய் தரும் சிறு கடன்களின் வளர்ச்சி மந்தமாக இருந்தது
நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளில் டிபாசிட்கள் குறைந்ததால், வங்கிகள் அதிக வட்டி தரவேண்டிய கால வைப்புத்தொகைகளை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவானது
ஹெச்.டி.எப்.சி., வங்கி மற்றும் கோட்டக் வங்கிகளின் தலைமை பொறுப்பு மாற்றம் தொடர்பான தெளிவான அறிவிப்புகள் வராதது முதலீட்டாளர்கள் மத்தியில் தயக்கத்தை ஏற்படுத்தியது.

