ADDED : மே 10, 2026 01:03 AM

மஹிந்திரா குழுமத்தின் அங்கமான 'டெக் மஹிந்திரா' நிறுவனம், 1986ல் 'பிரிட்டீஷ் டெலிகாம்' கூட்டுமுயற்சியுடன் தொடங்கப்பட்டது. மற்ற ஐ.டி., நிறுவனங்கள் வங்கி துறையை நம்பியிருக்க, டெக் மஹிந்திரா தனது வருவாயில் 33 சதவீதத்தை தொலைத்தொடர்பு துறை வாயிலாக பெறுகிறது.
இத்துறையின் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க, 2009ல் 'சத்யம் கம்ப்யூட்டர்ஸ்' நிறுவனத்தை கைப்பற்றி உற்பத்தி, நிதிச்சேவை மற்றும் சில்லறை வர்த்தகம் என தனது தடத்தை பன்முகப்படுத்தியது. தற்போது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 85 சதவீதம் ஐ.டி., சேவைகள் வாயிலாகவும், மீதமுள்ளவை பி.பி.ஓ., பிரிவிலிருந்தும் கிடைக்கின்றன.
கொரோனா காலத்துக்கு பிந்தைய சவால்கள்:
கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி முதலீடுகளால் 2021 - 23 காலகட்டத்தில், 19 சதவீத வளர்ச்சியை டெக் மஹிந்திரா நிறுவனம் கண்டது. இருப்பினும், அதை தொடர்ந்து சில முக்கிய சவால்களை எதிர்கொண்டது.
வாடிக்கையாளர்கள் புதிய தொழில்நுட்ப முடிவுகளை எடுப்பதில் தாமதம் காட்டியதால், 2023ம் நிதியாண்டில் புதிய ஒப்பந்தங்களின் மதிப்பு 12 சதவீதம் சரிந்தது. இது நிறுவனத்தின் 'விருப்பத்தேர்வு பணிகள்' மற்றும் வருவாயை பாதித்தது.
பெரிய ஒப்பந்தங்கள் வருவாயாக, மாற கால அவகாசம் தேவைப்படும் என்பதால், புதிய ஒப்பந்தங்கள் குறைந்தது அடுத்தடுத்த காலாண்டுகளில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியது.
வாடிக்கையாளர் நிறுவனங்களின் உள்மறுசீரமைப்பு மற்றும் விடுமுறை நீட்டிப்பு போன்ற காரணங்களால், 2023ல் 11.40 சதவீதமாக இருந்த எபிட்டா லாப வரம்பு, 2024ல் 6.10 சதவீதமாக வீழ்ச்சி கண்டது.
கடந்த 2024ன் முதல் காலாண்டில், ஒரு முக்கிய வாடிக்கையாளர் திவாலானதால், அதற்கான இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு நிறுவனத்தின் லாப வரம்பில் மேலும் 2 சதவீதத்தை குறைத்தது.
நிர்வாக மாற்றம் நிதி நெருக்கடிகளுக்கு பிறகு, 2023 டிசம்பரில் மோஹித் ஜோஷி, டெக் மஹிந்திராவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். இன்போசிஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், நிறுவனத்தை மேம்படுத்த மூன்று ஆண்டுகால (2025 - 2027) திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
கடந்த 2027 நிதியாண்டுக்குள் 15 சதவீத செயல்பாட்டு லாப வரம்பு, 30 சதவீதத்திற்கும் அதிகமான ஆர்.ஓ.சி.இ., மற்றும் 85 சதவீதத்திற்கும் அதிகமான உபரி பணப்புழக்கத்தை பங்குதாரர்களுக்கு திரும்ப வழங்குவது ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12 ஆக இருந்த வணிக அலகுகள் செயல்பாட்டு திறனுக்காக 6 ஆக குறைக்கப்பட்டன. நிர்வாக அடுக்குகளை குறைத்து நேரடி பொறுப்பு உறுதி செய்யப்பட்டது. உலகின் முன்னணி 200 வாடிக்கையாளர் நிறுவனங்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தவும், அங்கு முதலீடுகளை அதிகரிக்கவும் 'டர்போசார்ஜ்' என்ற சிறப்பு திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. மேலும், 'டாட்டட் ரிப்போர்ட்டிங்' முறையை நீக்கி, நிர்வாக சிக்கல்கள் களையப்பட்டுள்ளன.
புதிய தலைமை செயல்பாட்டு அதிகாரி அதுல் சோனேஜாவின் கீழ், 'புராஜெக்ட் போர்டியஸ்' வாயிலாக நிறுவனம் கடுமையான செலவு குறைப்பு மற்றும் செயல்பாட்டு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
ஊழியர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகளை தெளிவுபடுத்துவதுடன், நிறுவனம் முழுதும் ஒரு கண்டிப்பான செயல்திறன் சார்ந்த கலாசாரத்தை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திறமையான பணியாளர்களை கண்டறிந்து அவர்களை அடுத்தகட்ட தலைமை பொறுப்புகளுக்கு தயார் செய்வதற்கான முறையான திட்டங்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மீண்டெழுந்த லாபம் இந்நிறுவனம், 2025 நிதியாண்டில் 58,280 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இது நிலையான நாணய மதிப்பின் அடிப்படையில் 0.3 சதவீத வளர்ச்சியாகும்.
பெரிய ஒப்பந்தங்களை கைப்பற்றுவதில் நிறுவனம் வலுவான முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 12 மாத காலத்தின் மொத்த ஒப்பந்த மதிப்பு 42 சதவீதம் உயர்ந்து, 25,380 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆண்டு முழுதும் புதிய மற்றும் பெரிய ஒப்பந்தங்களை பெறுவதில் நிறுவனம் ஒரு தொடர்ச்சியான வேகத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.
நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 60 சதவீதம் அதிகரித்து, 5,731 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதன் வாயிலாக, லாப வரம்பு 9.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆட்டோமொபைல் மற்றும் ஹை - டெக் துறைகளில் நிலவிய மந்தநிலையையும் மீறி, நிறுவனம் இந்த லாப வளர்ச்சியை சாதித்துள்ளது.
மற்ற முதன்மை ஐ.டி., நிறுவனங்களை விட சிறப்பாக செயல்பட்டு, 59,220 கோடி ரூபாய் அளவிற்கு வருவாயை பதிவு செய்துள்ளது. இது 1.90 சதவீத வளர்ச்சியாகும்.
கடந்த 35,720 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 41 சதவீத அபரிமிதமான வளர்ச்சியாகும்.
செயல்பாட்டு லாபம் 31.40 சதவீதம் அதிகரித்து, 7,491 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்வாயிலாக, லாப வரம்பு 12.60 சதவீதத்தை எட்டியு ள்ளது.
அமெரிக்காவில் தொலைத்தொடர்பு துறை நிலைப்புத்தன்மை அடைந்ததும், ஐரோப்பிய சந்தை வளர்ச்சி பாதைக்கு திரும்பியதும் நிறுவனத்திற்கு பெரும் சாதகமாக அமைந்தது. 2023ம் நிதியாண்டின் சரிவிலிருந்து டெக் மஹிந்திரா நிறுவனம் தற்போது வெற்றிகரமாக மீண்டெழுந்துள்ளது. ஏ.ஐ., யுகத்தில் பல ஆண்டு ஒப்பந்தங்களை பெற, ஐ.டி., நிறுவனங்கள் 20 - 30 சதவீத உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது.
டெக் மஹிந்திரா நிறுவனம் ஏ.ஐ., மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தேவையற்ற கூடுதல் பணியாளர்களை கண்டறிந்து அவர்களை புதிய திட்டங்களில் பணியமர்த்துகிறது.
புதிய திட்டங்களுக்கு புதிய பணியாளர்களை சேர்க்காமல், ஏற்கனவே உள்ள திறமையானவர்களை பயன்படுத்துவதன் வாயிலாக செலவுகள் குறைக்கப்பட்டு லாப வரம்பு உயர்த்தப்படுகிறது.
ஏ.ஐ., சார்ந்த உற்பத்தி திறன் மேம்பாட்டை நிறுவனம் அளவிட தொடங்கியதன் விளைவாக, 2025ம் நிதியாண்டில் ஒரு ஊழியருக்கான வருவாய் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏ.ஐ., நவீனமயமாக்கல் மற்றும் டேட்டா இன்ஜினியரிங் துறைகளில் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஐ.டி., துறையில் தற்காலிக மந்தநிலை இருந்தாலும், 2026ல் வென்ற பெரிய ஒப்பந்தங்கள் நிறுவனத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 சதவீத லாப வரம்பு என்ற இலக்கை நோக்கி நிறுவனம் சரியான பாதையில் செல்வதால், பிற முன்னணி நிறுவனங்களை விட டெக் மஹிந்திரா சிறப்பாக செயல்படும் என எதிர்பார் க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
