sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாயம்

 உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாயம்

 உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாயம்


ADDED : டிச 08, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2025 01:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவீன அறிவியலில், உச்சம் தொட்டவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பல்கிப் பெருகுதலை 'உலகின் எட்டாவது அதிசயம்' என்று குறிப்பிட்டார். அவர் எதையும் மிகைபடுத்திக் கூறவில்லை. இன்றைக்கு நம்மைச் சுற்றி, செலவு செய்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் வந்துவிட்டன, ஆசைகளும் முளைத்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த பல்கிப் பெருகுதல் என்ற எளிய கருத்தைப் புரிந்துகொண்டால் போதும். அது பாதுகாப்பான, வளமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும்.

சேமிப்பின் முக்கியத்துவம்

வேறு எந்தக் காலத்தையும் விட, தற்காலத்தில் தான் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு புதுப்புது கண்டுபிடிப்புகள், நுகர்வோர் டிரெண்டுகள் ஆகியவை, மக்களை செலவு மட்டுமே செய்ய வைக்கின்றன. அதனால், வாழ்க்கைத்தரம் துளிகூட உயர்வதில்லை. பார்த்தவுடனே வாங்க வேண்டும் என்ற துாண்டுதல், கடைசியில் கடன் வலையில் தான் சிக்க வைக்கிறது.

இன்றைக்கு தனிநபர்களும், அரசுகளுமே கடன் வாங்குவதில் மும்முரமாக இருக்கும்போது, பல்கிப் பெருகுதல் என்ற சர்வரோக நிவாரணியை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

எளிய எடுத்துக்காட்டு

இப்படி ஒரு கணக்குப் போடுவோம். முதலாண்டில், ஒரு லட்சம் ரூபாயை, 10 சதவீத வட்டியில் முதலீடு செய்கிறீர்கள் என்று கருதுவோம். ஓராண்டு கழித்து அது 1,10,000 ரூபாயாக ஆக உயர்ந்திருக்கும். இரண்டாம் ஆண்டின் முடிவில், உங்களுக்கு 1,10,000 ரூபாய்க்கான வட்டி கிடைக்கும். இது முதலாண்டில் போட்ட 1 லட்சம் அல்ல, இப்போது 1,10,000 ரூபாய்.

இந்தத் தொகையை நீங்கள் தொடவே இல்லை, மறந்தே போய்விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மேலே ஒரு பைசா கூட போடவில்லை. அடுத்த 30 ஆண்டுகளின் முடிவில், இந்த ஒற்றை முதலீடு 17.45 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும்.

இதற்குத் தான் பல்கிப் பெருகுதல் என்று பெயர். அதாவது உங்கள் முதலீடு போட்ட குட்டி, மேலும் மேலும் குட்டி போட்டுக்கொண்டே இருக்கும்.

சேமிப்பும், செலவும்

நாளை என்று ஒன்று இல்லை, இன்றே நிஜம் என்று கருதுவோர் செலவு மட்டுமே செய்வர். இது ஒரு மனநிலை. அதேபோல், எதிர்காலத்துக்காகச் சேமிப்பது என்பது இன்னொரு மனநிலை. இந்த வித்தியாசத்தை எவ்வளவு சீக்கிரமாக புரிந்துகொள்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் பல்கி பெருகுவதன் பலன் உங்களுக்குக் கிடைக்கும்.

வளர்ச்சியும், பெருகுதலும்

பலருக்கும் ஒரு குழப்பம் உண்டு. அவர்கள் பணம் வளர்ச்சி அடைவதையும் பல்கிக் பெருகுவதையும் ஒன்றென நினைப்பர்; இல்லை, அது தவறு.

வளர்ச்சி என்பது படிப்படியானது, மதிப்பு உயரும்போது ஏற்படுவது. இதில் வருவாய் கூடலாம், குறையலாம். இதற்குச் சிறந்த உதாரணங்கள், நிலமும் தங்கமும். முந்தைய வருவாயானது, கூடுதல் லாபம் ஈட்டித் தராது.

ஆனால், பல்கிப் பெருகுதல் என்பதோ, முற்றிலும் வேறு. முந்தைய வருவாய்க்கும் சேர்த்தே கூடுதல் வருவாய் ஈட்டித்தருவது. அதாவது அடுக்கடுக்கான வளர்ச்சி. நீண்டகால அளவில் இந்த வழிமுறை நல்ல பலனைத் தரும். சிறந்த உதாரணமாக, மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி.,கள், அரசு கடன் பத்திரங்கள், வைப்பு நிதித் திட்டங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம்.

கணித ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால், வளர்ச்சி என்பது வெறும் 'பிளஸ்' அதாவது, உங்களிடம் ஏற்கனவே இருக்கும் ஒன்றில் ஏற்படும் உயர்வு. ஆனால், பல்கி பெருகுதல் என்பதோ 'பெருக்கல்' உங்களிடம் இருப்பதை அதிவேகமாக விரிவடையச் செய்தல்.

பலன்

பல்கிப் பெருகும் மாயத்தைக் கண்ணெதிரே பார்க்க வேண்டும் என்றால், மூன்று அடிப்படையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

முதலில் தேவையற்ற வீணான செலவுகளைக் குறைக்க வேண்டும். இன்றைய களாக்காயை விட, நாளைய பலாக்காய்க்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

பல்கிப் பெருகும் வாய்ப்புள்ள முதலீட்டு இனங்களைக் கண்டுபிடித்து முதலீடு செய்யுங்கள். வாழ்க்கையில் எவ்வளவு சீக்கிரம் இதைச் செய்கிறீர்களோ, உங்களுக்கு அவ்வளவு சுபிட்சம் காத்திருக்கிறது.

பொறுமைசாலிகளையே பல்கிப் பெருகுதல் உச்சாணிக் கொம்புக்கு இட்டுச் செல்லும். முதலில் கொஞ்சம் தொய்வாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பின் அசுர பாய்ச்சல் நிச்சயம்.

பல்கி பெருகுதலில், நேரம் தான் சூப்பர் ஹீரோ.

முடிவாக, உங்கள் வாழ்வில் எட்டாவது அதிசயம் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் பின்வரும் சூத்திரத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்:

* நன்கு சேமியுங்கள்

* புத்திசாலித்தனமாக

* முதலீடு செய்யுங்கள்

* பொறுமையுடன்

* காத்திருங்கள்.

காலமும், பல்கி பெருகுதலும் தத்தமது கடமைகளைச் செய்யும்போது, உங்கள் பொருளாதார எதிர்காலம் ஓஹோவென்று இருப்பது சர்வ நிச்சயம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us