UPDATED : ஜன 26, 2026 01:50 AM
ADDED : ஜன 26, 2026 01:49 AM

'ஆன்யுட்டி பாலிசி அல்லது பென்ஷன் பாலிசி' இது நமக்கு தேவையா, நமக்கு உகந்ததா, இதனால் நமக்கு ஆதாயம் என்ன? இதில் ரிட்டர்ன் விகிதம் கவர்ச்சியாக இல்லையே! நாம் செலுத்தும் பிரீமியம் கைவிட்டு போகிறதே, பிக்ஸட் டிபாசிட்டில் போட்டால் வட்டியும் வரும், அசல் நமது பிள்ளைகளுக்கு கிடைத்து விடுமே...இப்படி யோசிப்பவர்களுக்காக...
'ஆன்யுட்டி பாலிசி' என்ற தத்துவம் நிழலா? நிஜமா?
ஓய்வூதியத்துக்கும் காப்பீடுக்கும் என்ன தொடர்பு?
முதலில் ஓய்வூதியம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் 140 கோடி மக்களில் மிகச்சிலரே அதாவது, 15 சதவீதம் பேரே சம்பளத்துக்கு பணி செய்பவர்கள். அவர்களிலும் சிலர்தான் ஓய்வூதியம் வழங்கும் அரசுப் பணி மற்றும் பெருநிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.
புள்ளிவிபரங்களின்படி, நுாறில் 11 சதவீத இந்தியர்கள்தான் பணி ஓய்வு பெற்றால் பென்ஷன் வரும் என்ற நிம்மதியுடன் இருக்கிறார்கள். இவர்களுமே, பென்ஷன் தமது தேவைகளுக்கு போதாது என்று பல விதமாக தம்மை தயார்படுத்தி கொள்கிறார்கள்.
இதில் ஒரு முறைதான், இன்ஷூரன்ஸ். சேமிப்பிலிருந்து ஒரே தவணையாகவோ, பல ஆண்டுகள் காப்பீட்டு நிறுவனங்களிடம் சேமித்து வைத்திருக்கும் தொகையை கொண்டோ, பிரீமியம் கட்டி, ஆன்யுட்டி பாலிசி வாங்கலாம்.
ஒருவர் ஆயுள் கப்பீடு வாங்கினால், அவர் இறந்தபின் காப்பீட்டு தொகை அவரது வாரிசுதாரருக்கு தரப்படும். ஆன்யுட்டி, அல்லது பென்ஷன் பாலிசியில், அவருக்கு வாழ்நாள் முழுதும் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர பென்ஷன் தரப்படும். அவர் இறந்தபின் நின்றுவிடும்.
இதற்கும் பிக்ஸட் டிபாசிட்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்.டி., ஒவ்வொரு தடவையும் முதிர்வு அடையும்போது, புதுப்பிக்கும் தருணத்தில் வட்டி விகிதம் மாறலாம்.

முதிர்வான தொகையை அப்போதுள்ள சூழலுக்கு ஏற்றவாறு மற்ற செலவுகளுக்கு உபயோகிக்கும் நிலை வரலாம். ஆனால், ஆன்யுட்டி பாலிசி என்றால் சீராக பென்ஷன் வந்துகொண்டே இருக்கும்.
செலுத்திய பிரீமியம்? போனது போனது தானா?
பிரீமியத்தை நாமினிக்கு திருப்பி தரும் ஆப்ஷன் எல்லா பென்ஷன் பாலிசிகளிலும் உண்டு, அதை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
பார்க்கப்போனால் பென்ஷன் பாலிசி வாங்கும்போது கிட்டத்தட்ட பத்து ஆப்ஷன்கள் இருக்கும். தனக்கு பென்ஷன்; தனக்குப்பின் வாழ்க்கைத் துணைக்குப் பென்ஷன்; பிரீமியம் திரும்ப வேண்டாம் என்ற ஆப்ஷன்; பிரீமியம் நாமினிக்கு என்ற ஆப்ஷன்... என பல வகைகள் உண்டு.
முக்கியமாக கவனிக்க வேண்டியது, பிரீமியம் திரும்ப தரப்படும் அல்லது தரப்படாது போன்ற ஆப்ஷன்களுக்கிடையே, அல்லது தமக்கு மட்டும் வாழ்நாள் பென்ஷன்/ தமக்குப்பின் வாழ்க்கை துணைக்குப் பென்ஷன் என்ற ஆப்ஷன்களுக்கிடையில் பென்ஷன் தொகை வேறுபடும்.
எல்லாவற்றுக்கும் ஒரு விலை அல்லது கட்டணம் என்ற நிர்ணயம் உண்டு.
பென்ஷன் பாலிசி வாங்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருப்பவர்கள் எரிச்சல் படக்கூடிய மற்றொரு விஷயம், பென்ஷன் தொகை வருமான வரிக்கு உட்பட்டது.
இது ஒரு வருத்தப்படக்கூடிய நிலைமைதான் என்றாலும், பிக்ஸட் டிபாசிட்டுக்கான வட்டியும் வரிக்குட்பட்டதுதான்.
பென்ஷன் பாலிசி களில் ரிட்டர்ன் விகிதம் கவர்ச்சியாக இல்லை என்பது உண்மை. ஆனால் அது முழு உண்மை இல்லை. முன்பே கூறியிருக்கிறோம், இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்பு, முதலீடு இல்லை. இதன் ரிட்டர்ன் விகிதத்தை பார்த்து அரைகுறை கணக்கு போட வேண்டாம்.
பென்ஷன் பாலிசி எதிலிருந்து பாதுகாக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். வயதான காலத்தில் பணக்கவலையிலிருந்து. அந்த பாதுகாப்புக்கும் ஒரு விலை இருக்கும் இல்லையா? அதுவும் ஒரு ரிட்டர்ன்தான்.
முதுமையில் மனநிம்மதி மற்றும் நிதி சுதந்திரம் விலைமதிக்க முடியாதவை அல்லவா?

