பாரத் டெக்ஸ் - 2026 கண்காட்சி உலகளவில் இந்தியாவை உயர்த்தும்
பாரத் டெக்ஸ் - 2026 கண்காட்சி உலகளவில் இந்தியாவை உயர்த்தும்
UPDATED : ஜூலை 15, 2026 02:26 PM
ADDED : ஜூலை 15, 2026 02:31 AM

திருப்பூர்: ''பாரத் டெக்ஸ் - 2026' ஜவுளி, ஆடைகள் கண்காட்சி, உலகளாவிய கொள்முதல் மையமாக இந்தியாவை உயர்த்தும்,'' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
மத்திய ஜவுளித்துறை சார்பில், 3வது 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி நேற்று டில்லியில் துவங்கியது. மூன்று நாள் நடக்கும் கண்காட்சியை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், துவக்கி வைத்தார். 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி குறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால், இந்திய ஆடை துறை மீது, உலகளவில் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. 'பாரத் டெக்ஸ் - 2026' கண்காட்சி, சிறப்பான ஒருங்கிணைப்பு தளமாக அமைந்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர், திறன்களை உலக அரங்கில் வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது. கண்காட்சியில் நடக்கும் கருத்தரங்குகளில், 20 நாடுகளை சேர்ந்த, 350க்கும் அதிகமான வல்லுநர்கள் பேசுகின்றனர்.
உலக வர்த்தகம், புதுமை ஜவுளி, இண்டஸ்ட்ரி - 4.0, தொழில்நுட்ப ஜவுளி, 'பேஷன் மற்றும் சோர்சிங்' போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. முக்கியமான, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் வாய்ப்புள்ளது. கண்காட்சியில், 14 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. புதுமையான மற்றும் நிலைத்தன்மை கொண்ட உலகளாவிய கொள்முதல் மையமாக இந்தியாவை இக்கண்காட்சி உயர்த்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
