ADDED : பிப் 07, 2025 12:37 AM

முன்னெச்சரிக்கையால் விற்பனை
வாரத்தின் நான்காவது வர்த்தக நாளை, இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை விற்றனர். இதனால், சந்தை குறியீடுகள் இறக்கம் கண்டன. நேற்றைய வர்த்தக நேர முடிவில், நிப்டி 0.39 சதவீதமும்; சென்செக்ஸ் 0.27 சதவீதமும் இறக்கத்துடன் நிறைவு செய்தன.
பெயரை மாற்றிய சொமாட்டோ
உணவு வினியோகத் தொழிலில் ஈடுபட்டுள்ள சொமாட்டோ, தன் நிறுவனத்தின் பெயரை, 'எட்டர்னல் லிமிடெட்' என மாற்றுவதாக, பங்குச்சந்தைக்கு நேற்று தெரிவித்து உள்ளது. அதே நேரம், தன் உணவு டெலிவரி பிராண்டான 'சொமாட்டோ'வின் பெயர் எந்த மாற்றமுமின்றி தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஏர்டெல் நிகர லாபம் 505%
தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், கடந்த அக்டோபர் -- டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில், 14,781 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில், 2,442 கோடி ரூபாய் ஈட்டிய நிலையில், தற்போது, 505 சதவீதம் அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது.
எஸ்.பி.ஐ., 84% வளர்ச்சி
பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., தன் மூன்றாம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. இதில், 16,891 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபமான 9,160 கோடி ரூபாயைவிட, இது 84.30 சதவீதம் அதிகம். மேலும் நிகர வட்டி வருவாய் 41,446 கோடி ரூபாயாகவும்; மொத்த வாராக்கடன் 84,360 கோடி ரூபாயாகவும் உள்ளதாக தெரிவித்துஉள்ளது. சந்தையின் ஊசலாட்டம் காரணமாக இந்நிறுவன பங்கு விலை 2 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள், 3,550 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.60 சதவீதம் அதிகரித்து, 75.06 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 87.59 ரூபாயாக இருந்தது.
