UPDATED : ஜூலை 22, 2025 08:19 AM
ADDED : ஜூலை 21, 2025 10:27 PM

காலாண்டு முடிவுகளால் ஏற்றம்
வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. அன்னிய முதலீடுகள் மீண்டும் வரத் துவங்கி இருந்ததன் எதிரொலியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
இதனால், தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, எச்.டி.எப்.சி., வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்ட வங்கிகளின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் நாள் முழுதும் நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் வர்த்தகமாகின.
உலக சந்தைகள்
வெள்ளியன்று, அமெரிக்க சந்தைகள் கலவையுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பான் சந்தைக்கு நேற்று விடுமுறை. தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சாதகமாக இருந்தன. வங்கி துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியது.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,681 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய் உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.48 சதவீதம் குறைந்து, 68.93 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா குறைந்து, 86.31 ரூபாயாக இருந்தது.