கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்காலிக வீடு: நிதியுதவிக்கு திட்டம்
கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்காலிக வீடு: நிதியுதவிக்கு திட்டம்
ADDED : ஜூன் 19, 2026 06:07 AM

புதுடில்லி: கட்டுமான திட்ட இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தற்காலிக வீடுகள் அமைக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் இந்த தகவலை தெரிவித்தார்.
கட்டுமான பொருட்கள் தொடர்பான 'பாரத் பில்டுகான்' சர்வதேச கண்காட்சி டில்லியில் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு அமைச்சர் பேசியதாவது:
கட்டடங்களின் ஆயுள் மற்றும் பாதுகாப்பு குறித்து சான்றிதழ் வழங்குவதை கட்டாயமாக்க அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
கட்டுமான ஒப்பந்த மதிப்பில் ஒரு சதவீதத்தை, தொழிலாளர் நல வரியாக மாநில அரசுகள் வசூலிக்கின்றன. இந்த நிதியில் இருந்து, கட்டுமான காலத்தில் தொழிலாளர்களுக்கு கட்டுமானம் நடைபெறும் இடங்களிலேயே தற்காலிக குடியிருப்புகள் அமைக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
