தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கவர்ச்சிகரமான மாற்றங்கள்
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கவர்ச்சிகரமான மாற்றங்கள்
ADDED : செப் 19, 2025 11:52 PM

சென்னை: வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், தனியார் மற்றும் 'கிக்' பணியாளர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் பல புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதில் தனியார் துறையினரை கவரும் வகையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பணம் எடுப்பதற்கான வரம்பு: ஒருவர் 60 வயதில் ஓய்வு பெறும்போது, மொத்த சேமிப்பில் இருந்து ரொக்கமாக எடுக்கக்கூடிய தொகை, 60 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மீதி 20 சதவீதத்திற்கு மட்டும் மாதாமாதம் ஓய்வூதியம் தரும் ஆன்யுட்டி திட்டங்களில் சேர வேண்டும்.
அவசரத் தேவைக்கான பணம்: திட்டத்தில் இருக்கும்போது, அவசரத் தேவைகளுக்காக பணம் எடுப்பதற்கான வரம்பு, மூன்று முறை என்பதில் இருந்து ஆறு முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடன் பெறும் வாய்ப்பு: ஓய்வூதிய சேமிப்புக் கணக்கைக் காண்பித்து, நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு மாற்றம்: திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்ச வயது 70-ல் இருந்து 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெளியேறும் வயது 75-ல் இருந்து 85 ஆக மாற்றப்பட்டுள்ளது.
முதலீட்டு வரம்பு அதிகரிப்பு: பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான 75 சதவீதக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு, 100 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது 'மல்டிபிள் ஸ்கீம் பிரேம்வொர்க்' மாதிரி என அழைக்கப்படுகிறது.
வெளியேறும் வாய்ப்பு: தனியார் துறை பணியாளர்கள் 15 ஆண்டுகள் சேமிப்புக்குப் பிறகு திட்டத்திலிருந்து வெளியேறலாம் என்ற புதிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.