எஸ்.டி.டி., உயர்வை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்பு - தேசிய பங்குச்சந்தை நம்பிக்கை
எஸ்.டி.டி., உயர்வை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்பு - தேசிய பங்குச்சந்தை நம்பிக்கை
ADDED : பிப் 11, 2026 01:39 AM

ம த்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை வரி உயர்வை, அரசு மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக, தேசிய பங்குச்சந்தை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த வரி உயர்வு முதலீட்டாளர்களின் செலவை அதிகரித்துள்ள நிலையில், சந்தை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அரசு இதில் மாற்றங்களை செய்யலாம் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து என்.எஸ்.இ., நிர்வாகம், “பியூச்சர்ஸ் வர்த்தகமானது, பெரும்பாலும் நீண்டகால முதலீட்டாளர்களால் நஷ்டத்தை தவிர்க்க, 'ஹெட்ஜிங்'காக பயன்படுத்தப்படுகிறது. தற்போது வரி உயர்த்தப்பட்டுள்ளதால், இண்டெக்ஸ் மற்றும் ஸ்டாக் பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடுவது கூடுதல் செலவை ஏற்படுத்தும். இது நீண்டகால முதலீட்டாளர்களின் பங்கேற்பை குறைக்கக்கூடும். இந்த வரி உயர்வு காரணமாக வர்த்தகத்தின் அளவு எந்தளவு குறையும் என்பதை இப்போது துல்லியமாக கணிக்க முடியாது”, என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, புரோக்கர்கள் சங்கமான ஏ.என்.எம்.ஐ., இந்த எஸ்.டி.டி., உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“உலக சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்திய சந்தைகளில் ஏற்கனவே பரிவர்த்தனை செலவு அதிகம். இந்தச்சூழலில், கூடுதல் வரி சந்தையின் பணப்புழக்கம், ரிஸ்க் மேலாண்மை மற்றும் முதலீட்டாளர் பங்கேற்பை பாதிக்கக்கூடும். எனவே, பழைய எஸ்.டி.டி., வரியை தொடர்வதே சந்தை நிலைத்தன்மைக்கு உதவும்”, எனவும் கூறியுள்ளது.

