குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டு வழங்க 'ஹைபிரிட்' ஏ.டி.எம்.,அமைக்க திட்டம்
குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டு வழங்க 'ஹைபிரிட்' ஏ.டி.எம்.,அமைக்க திட்டம்
ADDED : ஜன 28, 2026 02:07 AM

யு .பி.ஐ., வாயிலாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்து வரும் நிலையில், குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை அதிகரிக்க, பல்வேறு முன்னெடுப்புகளை அரசு திட்டமிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வழக்கமாக 100, 500 ரூபாய் நோட்டுகளை வினியோகிக்கும் ஏ.டி.எம்.,களுக்கு பதிலாக, 10, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வினியோகிக்கும் புதிய ஏ.டி.எம்.,களை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இதே போன்று, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை, குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொள்ளும் வகையில், 'ஹைபிரிட்' ஏ.டி.எம்.,களை அமைக்க ஆலோசித்து வருகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கும் முன்மாதிரி ஏ.டி.எம்., தற்போது மும்பையில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன், நாடு முழுதும் இதனை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைபிரிட் ஏ.டி.எம்.,களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய போக்குவரத்து மையங்கள், சந்தைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அதிகளவில் அச்சிடுமாறு ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

