ADDED : டிச 15, 2025 02:06 AM

டிசம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில், அன்னிய முதலீட்டாளர்கள் 17,955 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக என்.எஸ்.டி.எல்., வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு சேர்த்து, நடப்பாண்டில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் 1.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
ரூபாய் மதிப்பு சரிவு, அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்போலியோவை மறுசீரமைப்பு செய்தல், ஆண்டு இறுதி தாக்கம் ஆகியவையே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற வளரும் நாடுகளின் பங்குகள் மதிப்போடு ஒப்பிடுகையில், இந்திய பங்குச்சந்தையில் உள்ள பங்குகள் விலை சற்று உயர்வாக இருப்பது மற்றொரு காரணம்.
அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக பங்குகளை விற்பனை செய்து வந்த போதிலும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 39,965 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
இந்தியா -- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும்பட்சத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச்சந்தைக்கு திரும்புவர் என, நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

