வளர்ச்சியை நிலைநாட்டும் கட்டாயத்தில் டி.சி.எஸ்.,
வளர்ச்சியை நிலைநாட்டும் கட்டாயத்தில் டி.சி.எஸ்.,
ADDED : பிப் 22, 2026 01:19 AM

டா டா குழுமத்தின் மிக முக்கிய துணை நிறுவனமான, 'டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்' தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில், சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. கிட்டத்தட்ட 55 நாடுகளில் இயங்கி வருகிறது. 2.50 லட்சம் கோடி ரூபாய் என்ற வருவாய் இலக்கை எட்டியது. கிட்டத்தட்ட 5.82 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஐ.டி., துறையின் நிலை செயற்கை நுண்ணறிவின் வருகையால், இத்துறை சார்ந்த நிறுவனங்கள், 'உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பணி நேரத்திற்கான கட்டணம்' என்ற முறையிலிருந்து, 'செயல்திறன் அல்லது முடிவை அடிப்படையாகக் கொண்ட கட்டண முறை'க்கு மாறி வருகின்றன.
இதன் காரணமாக, நிறுவனத்தின் அளவு என்பது இனி ஒரு பெரிய முக்கியத்துவமானதாக இருக்காது.
கொரோனாவுக்கு பின் கடந்த 2023 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளில், இந்திய ரூபாய் மதிப்பில் 6.40 சதவீத சி.ஏ.ஜி.ஆர்., வளர்ச்சியை பதிவு செய்தது. இதற்கு பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடனான ஒப்பந்தம் முக்கிய உந்துசக்தியாக இருந்தது.
கடந்த 2023-, இந்தியா முழுதும், ஒரு லட்சம் இடங்களில், நாட்டின் முதல் முழுமையான உள்நாட்டு தயாரிப்பான 4ஜி நெட்வொர்க்கை நிறுவுவதற்காக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடமிருந்து 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை டி.சி.எஸ்., கைப்பற்றியது.
நிறுவன அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருவதால், அதைச் செயல்படுத்துவதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள், நிறுவனத்துக்கு ஒரு குறுகிய கால வளர்ச்சி உந்துசக்தியாக அமையக்கூடும்.
'கிளவுட் மைக்ரேஷன், டேட்டா மாடர்னைஷேசன், அப்ளிகேஷன் மாடர்னைசேஷன்' ஆகிய பணிகள் தற்போது முக்கியத்துவம் பெறுகின்றன.
அதிகரிக்கும் போட்டி இரண்டாம் நிலை நிறுவனங்கள் டி.சி.எஸ்., போன்ற முதல்நிலை நிறுவனங்களிடமிருந்து புதிய ஒப்பந்தங்களையும், சந்தையையும் கைப்பற்றி வருகின்றன. இதற்கு, அவற்றின் குறைந்த செலவு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட துறைகளில் கொண்டுள்ள ஆழமான நிபுணத்துவமும் முக்கிய காரணமாகும்.
இரண்டாம் நிலை நிறுவனங்கள் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் கவனம் செலுத்துவதால், பட்ஜெட் நெருக்கடி இருக்கும் நேரங்களிலும், ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த சிறப்பான தீர்வுகளை தேடும்போதும் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனங்களையே அதிகம் விரும்புகின்றனர்.
ஏ.ஐ., தாக்கம் ஏ.ஐ., வாயிலாகக் கிடைக் கும் உற்பத்தித் திறன் உயர்வு, ஏற்கனவே தங்களுக்கு கிடைக்க துவங்கி விட்டதாக, டி.சி.எஸ்., தெரிவித்துள்ளது.
குறிப்பாக 'சாப்ட்வேர் இன்ஜினியரிங் லைப் சைக்கிள்' போன்ற துறைகளில் ஆரம்பகட்டமாக 10 -- 15 சதவீத லாபம் கிடைத்துள்ளதாகவும்; இது எதிர்காலத்தில் 20 -- 25 சதவீதமாக உயரக்கூடும் எனவும் டி.சி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் விரிவான மறுசீரமைப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதன் உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதம் பேரை, கிட்டத்தட்ட 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த பின்னரே இந்த நிதி முடிவுகள் வந்துள்ளன.
டி.சி.எஸ்., தனது ஏ.ஐ., சேவைகள் வாயிலாக ஈட்டும் வருவாய், மொத்த வருவாயில் 6 சதவீதம் என்று தெரிவித்துள்ளது. இது காலாண்டு அடிப்படையில் 17.30% என்ற விகிதத்தில் வளர்ந்து வந்தாலும், ஒட்டுமொத்த வணிகத்தை பெரிய அளவில் மாற்றும் நிலையை இன்னும் எட்டவில்லை.
உத்திகளில் மாற்றம் 'இன்போசிஸ், அசெஞ்ச் சர், ஹெச்.சி.எல்.,டெக்' போன்ற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், டி.சி.எஸ்., நீண்ட காலமாக பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தாமல், சுயமாகவே வளர்ந்து வந்தது.
ஆனால், வரும் ஆண்டு களில் நிறுவனங்களைக் கையகப்படுத்தும் உத்தியை கம்பெனி தற்போது கையில் எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில், 'கோஸ்டல் கிளவுட், லிஸ்ட் எங்கேஜ்' ஆகிய நிறுவனங்களை 773 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
மேலும், தனது பாரம்பரியமான குறைந்த முதலீட்டு முறையிலிருந்து மாறி, டேட்டா சென்டர் சந்தையில் நுழைவதன் வாயிலாக, அதிக சொத்து மதிப்பு கொண்ட உத்திக்கு மாறியுள்ளது.
கடந்த 12 மாதங்களில் நிறுவனத்தின் மொத்த ஒப்பந்த மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 1.50 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது.
புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மையால் நிலவும் கடினமான பொருளாதாரச் சூழலில், டி.சி.எஸ்., தனது முக்கியத் துறைகளான பி.எப்.எஸ்.ஐ., வணிகம் மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களில் தொடர்ந்து புதிய ஒப்பந்தங்களை வென்று, வளர்ச்சியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்துக்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய அழுத்தங்களை அதிகப்படியான பணி ஒப்பந்தங்கள் ஓரளவுக்காவது ஈடுகட்டுகிறதா என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
முந்தைய காலங்களில் இன்போசிஸ் மற்றும் ஹெச்.சி.எல்., போன்ற போட்டி நிறுவனங்களை விட டி.சி.எஸ்., பெற்று வந்த கூடுதல் மதிப்பீட்டுச் சலுகையை தற்போது இழந்துவிட்டது.
எனவே, உலகளாவிய பொருளாதாரச் சூழலில், ஒரு சாதகமான மாற்றம் ஏற்படும் வரை, நிறுவனத்தின் தேவைகள் குறித்த தெளிவான பார்வை கிடைக்கும் வரை, ஒரு எச்சரிக்கையான நிலைப்பாட்டுடன் முதலீட்டாளர்கள் அணுக வேண்டும்.

