ADDED : செப் 03, 2011 10:46 PM
புதுடில்லி:அசாம் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக, மத்திய அரசு மற்றும் உல்பா பயங்கரவாத இயக்கம் இடையே, சமாதான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
நாட்டின் வடகிழக்கில் உள்ள அசாம் மாநிலம், உல்பா இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அசாமில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உல்பா பயங்கரவாத இயக்கம் என, முத்தரப்பு இடையேயான நேரடி சமாதானப் பேச்சுவார்த்தை, நேற்று முதல்முறையாகத் துவங்கியது.
அப்போது, அசாமில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையாக, முத்தரப்புக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் நிறைவேறியது. இதன்படி, 'உல்பா இயக்கத்தினரின் கோரிக்கைகள் மீது, நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் வரையிலும், அவர்கள் எந்தப் பயங்கரவாதத் தாக்குதலிலும் ஈடுபடக் கூடாது.
அதேபோல், ராணுவத்தினரும் உல்பா இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. உல்பா இயக்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பாக, அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் நடத்தி, இறுதி ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் வரையிலும், இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

